Tuesday 21 September 2021

கைநிறை செந்தழல் > சவிதா > பரிதி பதிப்பகம்

                   
  












கனிகளாகும் கண்ணீர் துளிகள்  

கைநிறை செந்தழல் > சவிதா > பரிதி பதிப்பகம் >7200693200

 கவிதை என்பது எப்போதுமே தன்மொழியில் முகிழ்ப்பது.  மலையிடையே சுனைக்குள் ஊரும் நீர் போல. அது பெருகி, வெளிப்பட்டு, ஆறாகி பெருகுவது எல்லாம் பிறகுதான். காவிரி நீரைக்  கையில் அள்ளும்போது அது உருவான சிறிய நீர்குகை மனதில் தோன்றினால் – ஒரு கணமேனும் – அவன் கவிதையை ரசிக்கும் வாசகனுக்கு மிக அருகில் இருப்பவன்.

சவிதாவின் இந்த கவிதை தொகுதியில் புராண கால மாந்தர் முதல் நம் முன் நேற்று ஸ்கூட்டி ஓட்டுபவர் வரை பேசப்பட்டாலும், அந்த கவிதைகள் உருவான கணங்களை திரும்பி பார்க்க வைக்கின்றன. நினைத்து பார்க்க வைக்கின்றன.

எழுதியவருக்கும் படிப்பவருக்கும் எந்த சம்மந்தமும் கிடையாது. சம்மந்தம் எல்லாம் படைப்புக்கும் படிப்பவருக்கும் இடையேதான். அதற்கு பிறகுதான் எழுதியவரைப் பற்றிய அடையாளம் உருவாக வேண்டும். கறந்த பாலென.

 சவிதா, சாதாரணமான வார்த்தைகளைத்தான் உபயோகிக்கிறார். ஆனால் அவற்றின் சேர்க்கையில் ஒரு இறுக்கத்தை உருவாக்க முயன்று வாசகன் அதை தாண்டும்போது அதன் தொடர்ச்சியை எளிதாக கைப்பிடித்துக்கொள்ள வைத்து விடுகிறார்.

 சில கவிதைகளில், வாசகன் ஏற்கெனெவே கொஞ்சம் விஷயங்களை தெரிந்து கொண்டு கவிதை படிக்க வரவேண்டும் என்று எதிர்பார்க்கிறார். எளிமைக்கும் நீர்த்துப் போனதற்கும் உள்ள வித்யாசமே தெரியாத அளவு வெறும் வார்த்தைக் கோர்வைகளை கொண்டிருக்காத கவிதைகள் இதில் உண்டு.

 அன்றாடத்தின் கீற்று ஒன்றை எடுத்து அதில் புலப்படும் நேரடித்தன்மையை வைத்து ஒரு அபிப்ராயத்தை பகிர்ந்து கொள்ள முனைகிறார்.  அதிருஷ்டவசமாக பெரும்பாலான கவிதைகளில் அபிப்ராய திணிப்பு இல்லை.

 இத்தொகுப்பில் மரபின் சில சொட்டுக்களை விரவலாக வைத்திருக்கிறார். பெண்மனது கொள்ளும் அவசங்களை புகார்களாக இல்லாமல் பொருண்மைகளாக வைக்கிறார். கவிதைகளை காட்சிப்படுத்தி வரைந்த படத்தின் விளக்கங்களாக வடிவமைக்கிறார். பெரும்பாலும் புலம்பல்கள் இல்லை. சுய கழிவிரக்கம் இல்லை. வன்மம் மூலம் தன்னை நிறுவிக்கொள்ளும் அவசரம் இல்லை. மிக இலகுவாக மரபின் பார்வைகளை கொச்சைப் படுத்திவிடவேண்டிய வீம்பு இல்லை. கிழித்து தொங்கவிட வேண்டும் என்ற ஆத்திரங்கள் இல்லை. தோலுரித்து காட்டுவதில்தான் முனைப்பு கொள்கிறார். இத்தனை ‘இல்லை’கள் இருப்பதால் இந்த கவிதைகளை உவப்புடன் வாசிக்கப் புகலாம். 

 பொதுவாகவே, சற்றே நீண்ட கவிதைகள் இவருடையவை. தொகுப்பில் உள்ள 45 கவிதைகளில் ஒரே பக்கத்துக்குள் அடங்குபவை மூன்று கவிதைகள்தாம். நீண்ட கவிதைகளின் இடையே நல்ல வரிகள் சில அடுக்கம் பெறுகின்றன.  

 சிலவற்றைப் பார்க்கலாம் - 

மனம் கசங்கி வலிகள் வழியும் சிலவற்றை சொல்லும்போது -

 கழற்றி பாலில் போடப்பட்ட

தாயின் மஞ்சள் கயிற்றிலிருந்து

தங்கத்தை பிரித்தெடுத்திருக்கிறீர்களா?

 நடுத்தர வாழ்வின் வழக்கமான இரவுக்கு வரவிருக்கும் கணவனை சொல்லும் மனைவியின் அலுப்பை சொல்லும்போது –

 அனைத்து

அந்தரங்க அலைபேசி செயலிகளிலும்

வழிந்து ததும்புகின்றன

மறைக்கப்பட்டும்

மறுக்கப்பட்டும்

ஒளியிழந்த காதலும்

விழிகூசும் காமமுமாக

 இறுக்கமான ஒரு மனோ நிலையைப்பற்றி சொல்லும்போது -

 முழுகிப்போக

முடிவெடுத்தபின்

கிணற்றுக்கும் கடலுக்கும்

உப்பு மட்டும்தான் வித்யாசம்

 எத்தனை சிதிலப்பட்டாலும் எளிதில் தீர்ந்துவிடாத அன்பைப் பற்றி சொல்லும்போது –

 உருவாகி அழிந்தபின்னும்

அன்பின் முட்டுதல்

இடையறாது நடைபெறுகிறது

ஒவ்வொரு அலையிலும்

 காதலிலும் காமத்திலும் செயல்படும் முத்த வித்யாசத்தை பற்றி சொல்லும்போது -

 தாய்ப்பூனை

குட்டியின் கழுத்து கவ்வும் பாதுகாப்பை

நீ என்றேனும் முத்தத்தில் உணர்ந்திருக்கிறாய் எனில்

இன்று உனக்கும் முத்த தினமே

  ஒரு ஸ்திரமற்ற ஆனால் விட்டுவிடமுடியாத உறவின் சீண்டலைப் பற்றி சொல்லும்போது --

 எப்போதும் தோற்றுக் கொண்டிருக்கிறாய்

இருபக்கமும் சமமான நிறையை நிறுவ முடியாமல்

என்றேனும் சமமாய் நிறுவ

உன்னால் முடிந்ததெனில்

அன்று பொருள் கொள்

உனை என்னைவிட்டு விலக

நான் அனுமதித்துவிட்டேன் என

 என சிலவற்றை குறிப்பிட்டுச் சொல்லலாம்.

 திரியில் எரியும் தழலின்

தன் முறைக்காக கணம்தோறும் தவமிருக்கிறது

ஒவ்வொரு எண்ணெய்த் துளியும் –

போன்ற சில வரிகளில் நுட்பமான அவதானங்களும் அவற்றை சரியான இடங்களில் உவமிக்கவும் முடிகிறது இவரால்.

 புராணிக பாத்திரங்களின் குணாம்சங்கள் சில கவிதைகளில் கனமானதொரு அம்சமாக அமைகிறது. சில கவிதைகளை நீர்க்கடிக்கிறது.  பகிர்ந்து கொள்ள வரும் ஒன்றைப்பற்றி தனக்கு தோறும் எல்லாவற்றையும் அடுக்கி சொல்லிவிடவேண்டும் எனும் ஒரு மெல்லிய அவசரம் தெரிகிறது. அது தேவையில்லை. வாளால் வெட்டும்போது கடத்தப்படும் அழுத்தம் சுருள்கத்தியை சுழற்றும்போது கிடைப்பதில்லைதானே!

 நடராஜர், பிரகலாதன், ஜமதக்னி, யூதாஸ், பார்த்தன், அல்லி, திரெளபதி, சீதை, சூர்பனகை, துர்வாசர், நளன், வாசுதேவன், தேவகி, ரேணுகா, கிளியோபாட்ரா, ஹெலன், விசித்ரவீர்யன், பாசுராமர், திருதிராஷ்டிரன், சஞ்சயன், என பாத்திரங்கள் உலவுகின்றன.  சிம்பு, விஜய் சேதுபதி, புதுமைப்பித்த, நாபா, போன்ற பெயர்களும்.

புராண நிகழ்வுகளைச் சொல்லி அந்த கதைமாந்தர்களை நடப்புலகின் வெளிச்சத்தில் கொண்டுவந்து உருட்டிப் பாக்கிறார். உரசிப் பார்க்கிறார். அதன் மூலம் அவர் வெளிக்கொணரும் மன உணர்வுகள் எண்ணப் பொறிகளை உருவாக்குகின்றன. சாணைக்கல்லின் பொறிகளாக சீறி மறைகின்றன.

உதாரணமாக – ‘பானை ஒன்று வனைய அகழ்ந்தெடுத்த களிமண்ணை’ என்ற கவிதையில்  ஜமதக்னி, ரேணுகா புராண கதையிலிருந்து ஒரு பெண்ணுணர்வை எடுத்துக்கொண்டு அதை ரேணுகாவைப் பற்றி சொல்வதன்மூலம் நமக்கு சொல்கிறார். இன்னும் கூட வரிகளை சுருக்கி இருக்கலாம் என்றாலும் மிக நல்லதொரு கவிதை. அதில் ஒரு பகுதி -

 முழுக்க நனைந்தவள்

தலை முழுகிய பின்னரே

கரை ஏறினாள் கடைவாயோரம்

வழிந்திருக்கும் பெண்மையைத் துடைத்தபடி.

ரேணுகாவை இன்றைய ஒரு பெண் மனதுக்குள் வைத்து எளிதாக இந்த கவிதைக்குள் நுழைந்து வெளியே வரலாம். வரும்போது சாரத்தின் மகரந்தங்கள் நம்மேல் ஒட்டி இருக்கும்.  இது இவரது இத்தகைய பார்வையின் அல்லது உத்தியின் பலம் என்று கூட சொல்லலாம். இவ்வகை கவிதைப் பார்வையை இவர் தனது தனித்துவமாக கூட எதிர்வரும்காலத்தில்  மெருகேற்றலாம். ஆனால் ஆழமான பரிசீலனைகளுக்கும் பொருத்தப்பாடுகளுக்கும் பிறகே அந்த பாதையை தேர்ந்தெடுக்கவேண்டும். தீவிரத்தை விட ஆழங்களே இதில் முக்கியம்.

ஆனால் இதே புராண அம்சம் ‘இணையாய் சபையில் ஆட உடை ஒத்துவராத உபத்திரவம்’ என்ற கவிதையில்  செறிவாக ஆரம்பித்து பல புராண பாத்திரங்களை பட்டியலிட்டுப் போகிறது. கவிதை நீர்த்துக்கொண்டே போகிறது. இறுதியில் கீர்த்தி சுரேஷ் தொண்டை எரிய புட்டியை கவிழ்த்துக் கொள்கிறாள், சியர்ஸ் சொல்லிப் போகிறாள் டெனிம் அணிந்த அதே துரகத்தழல் எரித்த இன்னொருத்தி என்று முடிக்கும்போது அந்த முடிச்சு நன்றாக விழுகிறது. ஆனால் கவிதை சோபிக்கவில்லை. ஏன் என்று மறுபடி மறுபடி வாசிக்கும்போது புரியும்.  உண்மையில் இது ஒரு நல்ல கவிதை. ஆனால் அதில் செதுக்கலில் தள்ளவேண்டிய பிசிறுகள் சில உள்ளன.

 முத்தங்களை பற்றிய கவிதையில், முத்தம் என்பதை பாதுகாப்பின் மென் கவ்வலாக காண்கிறார். இது ஒரு பெண்ணைப்பார்த்து பேசும் கவிதை போலத்தான் இருக்கிறது. முத்தம் என்பதை உடல் சார்ந்த இயக்கமாக, அது ஒரு தொழிற்பெயர் என்கிறார்.

 காமத்தில் சேர்த்தியில்லை

அந்த காதலின் உதடொற்றுதல்.

காதலில் சேர்த்தியில்ல

அந்த காமத்தின் கவ்வுதல் என்று மெல்லிய வித்யாசத்தை காண்பிக்கிறார். ஆனால் நிறைவாக இருப்பது எதுவென்றால் -

 தாய்ப்பூனை /  தன் குட்டியின் கழுத்து கவ்வும் பாதுகாப்பை /

நீ என்றேனும் முத்தத்தில் / உணர்ந்திருந்தாய் எனில்/ இன்று உனக்கும் முத்த தினமே/  என்று முடிக்கிறார்.

 இதில் ஒருமை கூடி வரவில்லை. கவிதையை கவனிப்போம்.  ‘வேட்கையின்றி வேறென்ன தொழிற்பெயர் அது ?” என்று அதை ஒரு சாதாரண உடலியக்கமாக குறிப்பிடுகிறார்.  பிறகு ஒற்றுதல், கவ்வுதல் என்று முத்தத்தின் பேதங்களை ரசனையாக சொல்கிறார். முத்தமொழி பேசுபவனுக்கு இல்லை உடற்தேசபேதம் என்று – அன் விகுதி மூலம் ஆணைப் பற்றிய ஒரு விமரிசனமாக சொல்கிறார். பிறகு பூனைக் கவ்வலின் பாதுகாப்பு முத்தத்தில் இருந்தால் உனக்கும் இன்று முத்த தினமே என்று முத்தம் என்பது மனதின்பாற் செயற்படும் ஒன்றாக சொல்கிறார். தவிரவும் கவிதை ஒரு பெண்ணை நோக்கி பேசும் கவிதையாக மாறிக்கொண்டே வருகிறது.

 பெண் மனது விரும்பும் மேன்மைகளை, துய்க்க விரும்பும் மிருதுக்களை பித்தேறிய ஆணால் அடையாளம் கண்டு கொள்ள முடிவதில்லை என்பதை அழகான உவமைக் காட்சி ஒன்றின் மூல காட்சிப்படுத்துகிறார்.

 ஓங்கியளந்தானை

பட்டாம் பூச்சி மட்டும்தான் பிடித்து தரக் கேட்டேன்

நிதமும் என்ன வேண்டுமென கேட்ட பொழுது

ஒரேயொருமுறை

அவன் பூக்களுக்கிடையே நுழையத் தெரியாமல்

இலைகளை

துவம்சம் செய்து கொண்டிருக்கிறான்.

சுதந்திர மனத்துடன் ஏற்படுத்திக் கொண்டுவிட்ட சிநேகங்கள் தங்கள் அதிகாரத்தை நிறுவ முயல்கையில், தள்ளி வைப்பதற்கு சற்றும் யோசிப்பதில்லை என்பதை சற்று ஜனரஞ்சகமாக

 அல்லிக்குப் பிறகு

அரசாளும் திமிரெல்லாம்

உன்னிடம் வந்துவிட்டதென

வாட்ஸப்பில் பத்தி பத்தியாய் திட்டிய

பார்த்தனை நேற்றிரவு

ப்ளாக் செய்துவிட்டேன்.

 இதில் வாட்ஸப், அல்லி, இரவு, ப்ளாக் செய்வது போன்றவை மிகவும்  நடப்புலகு சார்ந்த சிநேகிதச் சிக்கல்களை சொல்கிறது. அநாயசமாக. இன்றை அதனுள் தைத்து வைத்திருக்கிறது இக்கவிதை.

 சில கவிதைகள் நினைவுகளின் வாசமாக வரிகளில் அடைத்து வைத்து விட்டிருக்கிறார்.

வீட்டை விட்டுப் போன

மோகன் மாமா வாங்கித்தந்த புடவை

கிழிந்தபின்னும் தூங்குகிறது

அம்மாவின் பெட்டியில்

* * *

முதல்முறை தொட்டபோது

அணிந்திருந்த புடவையை

துவைக்காமல் வைத்திருக்கிறேன்

உன் வாசத்தை தொலைத்துவிடும் பயத்தில்

 தனித்தனி நினைவுப்பிசிறுகளை அடுக்கி இருக்கும் நீளமான கவிதை  ஒன்றில்

                     சேலை கட்டும் பெண்ணின் வாசத்தை

                    கமலளவு ரஜினி புரிந்து கொண்டதாகவே தெரியவில்லை

                    தர்பார் வரை

 போன்ற வாரப்பத்திரிககளுக்கான துணுக்குகள் இருக்கும் அதே கவிதையின் கடைசியில்தான்

 அடர்ந்த கருப்பில்

வாடாமல்லிப் பூக்கள் இறைத்த புடவையில்

உத்தரத்தில் தொங்கி இருந்த சரசு அக்கா

துணிக்கடைக் காரனின் பாக்கியை

அலமாரிக்குள் வைத்துவிட்டே இறந்திருந்தாள்

 என்ற கனமான கவிதையும் விழுந்திருக்கிறது. தொகுப்பின் சிறந்த வரிகளுள் சில இவை.

இது கலாப்ரியாவின் சிநேகிதனின் தாழ்வான வீடு என்ற கவிதையை நினைவூட்டியது. வறிய வீட்டின் பல இடங்களை பழைய நினைவுகளால் சுட்டிப்போகும் நீண்ட கவிதையில்  

 நின்றால் எட்டிவிடும்
உயரம்
என்று சம்மணமிட்டு
காலைக் கயிற்றால் பிணைத்து -
இதில் தூக்கு மாட்டித்தான்
செத்துப்போனார்
சினேகிதனின்
அப்பா.

                                                             - கலாப்ரியா

பெண்ணைப் புரிந்து கொண்ட அல்லது அனுசரித்த அல்லது ஏற்றுக்கொண்ட இன்னொரு பெண்ணாக ஒரு கவிதை. காலம் போகப்போக எத்தனையோ எரிச்சல்கள் காலம் தந்த களிம்புகளால் வடு நீங்கிப் போன்கின்றன என்பதாக –

 கையளவு சரிகை குறைந்ததற்காக

திருமணத்தில்

சண்டையிட்ட மாமியாருக்கு

நைட்டியிட்டு அழகுபார்க்கிறாள்

நடையிழந்த காலத்தில்.

 இதில் ‘அழகு பார்க்கிறாள்’ என்கிற வார்த்தை இல்லாவிட்டால் இது வன்மத்தை சொல்லும் கவிதையாக மாறிவிடும் அபாயம் இருக்கிறது.  கவனமாக இதை எழுதி இருப்பார் என்றே தோன்றுகிறது.

* * *

இரவின் ஆணவம், டான்டேலியின் இறகு, மோகக்கனல், கருப்பித்துப் போகிற இருட்டு, கைநிறை செந்தழல் போன்ற நல்ல கவிதைக்கு தேவையான சொற்ப்ரயோகங்கள் இருக்கின்றன.  ஈருருளி, பக்க கைகாட்டி என்றெல்லாம் அவஸ்தைப் படவேண்டாம். பின்னால் ப்ரேக், சிங்கிள் மதர் ‘போரடிக்கிறது’ என்ற வார்த்தைகள் வந்து தங்கள் வேலையை செய்திருக்கின்றனவே.

* * *

 சவிதாவுக்கு நட்புடன் ஆலோசனை சொல்லவேண்டுமெனில் – நிறைய எழுதுங்கள் அவற்றில் மேலும் செறிவாக்குங்கள் தொகுப்பை மேலும் வெற்றிபெற செய்ய இந்த அடர்த்தி உதவும். ஏனென்றால் கவிதைகள் தொகுப்புக்கு செல்வதில்லை. வாசகர்களை தேடி செல்கின்றன.

* * *

 தொகுப்பில் செறிவான கவிதைகளில் இரண்டைச் சொல்ல வேண்டும் என்றால்

                  அவளுடைய நிலையாமை உங்களை

    இவ்வளவு பதற்றத்துக்கு உள்ளாக்குகிறது ”  என்ற கவிதையும்

  “பானை ஒன்று வனைய அகழ்ந்தெடுத்த களிமண்ணை “ என்ற கவிதையும்.

இந்த இரண்டிலும் மிகச்சன்னமானதொரு ஒரு பொருத்தமின்மை இருக்கிறது எனது பார்வையில். ஆனாலும், அவற்றை மீறி இந்த இரண்டு கவிதைகளும் நல்ல இரு கவிதைகள் என்பேன். பேசுபொருளை சரியாகவே கடத்துகிறது என்பதால். அந்தரங்க உணர்சிகள் மிகவும் கவித்துவமாக வெளிப்பட்டிருப்பதால்.. 

* * *

 கவிதைகள் எல்லாவற்றிலுமே பெரும்பாலும் ஒரு வலி இருக்கிறது.  நேரடியாகவோ மறைமுகவாகவோ அது சொல்லப்படுகிறது. அது இழப்பு, பிரிவு, கண்ணியம், துக்கம், நிராகரிப்பு போன்ற பலவற்றால் இருக்கலாம். சொல்லமுடியாதவற்றை உணர்த்திவிட முயலும் கவிதை வரிகளில் துளிர்த்து சொட்டிவிடும் கண்ணீர் துளிகள் இருந்தாலும், அவை பரிதாபத்தை கோருபவையாக அல்லாமல், சீற்றத்தை தெறிப்பதாக அல்லாமல், அழகிய சிறு கனிகளாக உதிர்கின்றன. இனிப்பும் உவர்ப்புமாக.

நீங்கள் அடுத்த தொகுப்பை கொண்டுவரும்போது மேலும் மெருகேறிய சவிதாவை காணமுடியும் எனும் நம்பிக்கையை இந்த தொகுப்பு தருகிறது.

 

Sunday 12 September 2021

காலகட்டத்தின் புத்தகப்பேழை - வைதீஸ்வரன் கதைகள் எஸ். வைதீஸ்வரன் கவிதா பப்ளிகேஷன்

 காலகட்டத்தின் புத்தகப்பேழை

                                                                     

வைதீஸ்வரன் கதைகள்

எஸ். வைதீஸ்வரன்

கவிதா பப்ளிகேஷன், kavithapublication@gmail.com

 

சிறுகதை உலகு தமிழுக்கு கவிதை அளவுக்கு சொந்தமானது அல்ல. ஆனால் அதை இருநூறு ஆண்டுகளில் பல விதமாக நாம் வளமூட்டி இருக்கிறோம் அல்லது வளப்பட்டு இருக்கிறோம். குறிப்பாக  நவீன இலக்கிய பரப்பில். வங்காளம் நமக்கு கொஞ்சம் முன்னதாகவே நவீன இலக்கியத்துக்கு நெருங்கி இருந்து என்றே சொல்லலாம். பாரதியை வங்காளம் ஈர்த்திருந்தது.

தமிழில் பண்டித தமிழ் மற்றும் இலட்சியவாத சிறுகதை அம்சமே கலையின் பூரணம் அல்லது கலையின் சேவை என்று இருந்த நிலைமை. மணிக்கொடி காலம், எழுத்து வின் புதிய இலக்கிய பார்வை அதை தொடர்ந்து சிற்றிதழ்கள் பல வந்து, செறிவான நவீன இலக்கியம் பேசுபொருள் ஆனது.

தமிழிலக்கியத்தை முறையாக வாசிப்பவன் எதையுமே ஒதுக்கி விட்டு இலக்கியத்தை அணுக முடியாது. மு வ போன்றோர் வாசிக்கப்பட்ட காலத்திலேயே மாதைவையா போன்றோரும் வாசிக்கப் பட்டனர். இன்று நிறைய மாறி முன்னேறி இலக்கியம் வளர்ந்து விட்டிருக்கிறது. இந்த பின்னணியில் ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு சிறுகதை இலக்கியம் எப்படி இருந்தது இன்று எப்படி இருக்கிறது என்று நாம் நம்மை உரசி பார்த்துக் கொள்ளலாம். அது முக்கியமும் கூட. இல்லாவிட்டால் பூனை கண்ணை மூடிக்கொண்டது போல் நாம் இருந்து விடுவோம். நிறைய பூனைகள் உலவும் இன்றைய இலக்கிய ஊடக சாம்ராஜ்யத்தில் இது மேலும் முக்கியமாகிறது.

எழுத்து காலத்தில் அறிமுகமான எஸ் வைதீஸ்வரன் கவிஞரும் சிறுகதையாளரும் ஆவார். தமிழ் இலக்கியப் பரப்பில் கவிஞர்கள் சிறுகதை உலகிலும் எழுதி இருக்கிறார்கள். நானறிந்தவரை, இரண்டிற்கும் வித்தியாசப்பட்டு நிற்பவர்கள் வெகு சிலர். ஒரு உதாரணம் சுந்தர ராமசாமி & பசுவய்யா.. கவிதையின் ஒளியும் நிழலும் சிறுகதைகளின் மேல் பாவுவதையே ஒரு கலையாக பரிணமிக்க வைப்பவர்கள் உண்டு. உதாரணம் வண்ணதாசன் & கல்யாண்ஜி.

 கவிஞனின் கூர்மையான அவதானங்களை சிறுகதைகளாக, கவிதை மனத்தின் வால்நட்சத்திர நீட்சியாக படைப்பவர்களில், எனது வாசிப்புக்கு அறிந்தவரை எஸ். வைத்தீஸ்வரனை சொல்லலாமென்று எண்ணுகிறேன். இவர் ஒரு தேர்ந்த ஓவியரும் கூட. உதயநிழல் கவிதை தொகுப்பில் அட்டைப்படமும், உள்ளோவியங்களும்  இவரது ஓவியங்களே.அதிருஷ்ட வசமாக அவரது அனைத்து கதைகளும் தொகுப்பாக வந்திருப்பது. எல்லாமே சுமார் ஐம்பது வருட கால நீட்சியில் எழுதப்பட்டவை. சுதந்திர கால இந்தியா, அதற்கு முற்பட்ட காலமும், சமீப காலம் வரையும் எழுதப்பட்டுள்ளன.

 

கதையில் உள்ள பல காட்சிகள் இன்று வெறும் தகவலாக மட்டுமே ஆகிப்போனவை -  தெரு விளக்குகளாக கிரசின் விளக்குகள் தொங்க விடப்படுதல் – வைத்திய முறையாக சிறிய தவளையை கக்கத்தில் வைத்து கட்டுதல் – நள்ளிரவு விமான நிலையத்துக்கு ஸ்கூட்டரில் செல்ல வேண்டிய இருத்தல் – வண்டி சக்கரத்தில் விரல் நசுங்கி போன தாத்தா விரலை பற்றி கவலை இல்லாமல் அதில் இருந்த பச்சைக்கல் மோதிரம் போனதென்று வருந்துவது –  கணவனை இழந்த முத்தம்மா பாட்டி சந்தோஷமாக தானும் தீயில் இறங்குவது – தந்தி என்பது ஒரு அதிர்ச்சி செய்தியின் அடையாளமாக போவது – தூக்கத்தில் நடப்பது – போன்றவற்றை இன்று யாரும் அதிகம் எழுத மாட்டார்கள். இவற்றில் ஏறக்குறைய எல்லாமே நிஜ சம்பவங்கள் என்றே எண்ணுகிறேன்.

 

ஒட்டு மொத்த தொகுப்பாக 34 கதைகளை படிக்கும்போது எல்லா கதைகளையுமே. கதை சொல்லிதான் கதை சொல்கிறார் என்பது தெரிகிறது. நான், என் தாத்தா, என் ஸ்கூட்டர், என் அத்தை. மேலும் கதை சொல்லியின் வெவ்வேறு பருவங்கள் – சிறுவன் முதல் வளர்ந்த வாலிபன் வரையிலும் சொல்லப்படுவதால், இது ஒரு சுயசரிதைத்  தன்மையைக் கொடுத்து விடுகிறது. மேலும் சில கிட்டத்தட்ட கட்டுரைக்கு அருகில் நிற்பவை. ஆனால் இவற்றின் வடிவ அம்சங்களை விடுத்து அனுபவக்கூறுகளை, நிகழ்வுகளை வாசிக்கும்போது ஒரு காலம் கண் முன் விரிகிறது.

 

“இன்றைக்கு பார்க்கிற நிஜத்துக்கும் என்றோ நிகழ்ந்து மறைந்த நிஜத்துக்கும் ஏதோ ஒரு பாலம் இருக்கிறது. அதுதானிந்த கதைகளுக்கு ஆதாரம்” என்று பின்குறிப்பில் அவரே சொல்கிறார். 

 

அவருடைய திசைகாட்டி தொகுப்பில் உள்ள சில கட்டுரைகளே சிறுகதைக்கு ஒப்பானவை என்பதை நினைவு கூறலாம். சில இந்த தொகுப்பில் இருக்கின்றன. டாக்சிடர்மி பின்னணியில் எழுதப்பட்ட ‘ஒரு பறவையின் நினைவு என்னை’ மிகவும் பாதித்த ஒன்று.

 

மிக மென்மையான உணர்வும் அவதானமும் கொண்ட கவித்துவமான கதைகள் – மலைகள், ஒரு பறவையின் நினைவு,  ஒரு கொத்துப்புல், ஓவியங்களுக்கு இடையில் ஒரு காட்சி, சிருஷ்டி.

 

அதிர்ச்சி தரும் கதைகள் – எங்கிருந்தோ வந்தான், தவளையின் ரத்தம்,

 

ஒரு காலத்தின் பரப்பை காட்டும் கதைகள் – கொடியின் துயரம், கல்லை எறிந்தவன், பைத்தியக்காரன், ஊருக்குள் இரண்டு காளி. - என வகைகளை இதில் காணலாம்.

 

சிருஷ்டி, கல்லை எறிந்தவன், கொடியின் துயரம், தவளையின் ரத்தம், ஒரு பறவையின் நினைவு போன்ற சிறுகதைகளைப் பற்றி சுருக்கமாக சொல்லுவது தொகுப்பை நாடி செல்ல உந்துதல் தரும் என்று நம்புகிறேன்.

 

எனக்கு பிடித்த கதை- சிருஷ்டி. களிமண்ணில் பிள்ளையார் செய்யும் அப்பா சிறு மகன் பற்றிய சிறுகதை. அருமையான ஒரு கதை. களிமண்ணில் பிள்ளையார் செய்வதில் உள்ள சவால் என்பது ஆரம்பித்து, அப்பா ஒரு ஹீரோ போல பிள்ளையாரை உருவாக்க போகிறார் என்று ஆர்வத்தோடு பார்த்துக் கொண்டிருக்கும் மகன் சிறுவன் கோபு முன்பு பிள்ளையார் செய்ய வராமல் சோதிக்கிறது. ஒரு சமயத்தில் பிள்ளையாரின் முழு உருவ அமைப்பும் நுணுக்கங்களும் கூட மனதில் தோன்ற மறுக்கிறது. என்னென்னவோ முயன்று முடியவில்லை. உற்சாகமாக “அப்பா பிள்ளையாரை நான் பண்ணட்டுமா?” என்று கேட்குக்ம்போது “ச்சே..ச்சே உனக்கு பிள்ளையார் பண்ண தெரியாது என்று சொல்ல நினைத்தார். தனக்கே அது தெரியவில்லை என்று கோபுவுக்கு தெரிந்து விட்டதை எண்ணி சங்கடமாகி மௌனமாக இருந்தார். கோபு அடுத்த வருஷம் நீ பண்ணலாம். இப்போது நான் பண்ணுவதை கவனமா பாத்துக்கோ ஒன்று லௌகீக உபதேசம் பண்ணினார்” என்று எழுதுகிறார். கடைசியில் ஏதோ ஒரு உருவம் வருகிறது. இதுவா பிள்ளையார் என்று கோபு கேட்க “இன்னிக்கு இதுதான் பிள்ளையார்” என்கிறார். அவன் ஆனந்தமாக தலையில் வைத்து ஆடிக்கொண்டு போகிறான்.  இதில் களிமண் பிள்ளையார் என்பதை பிள்ளையாராக அல்லாமல் வேறொரு உலகியல் குடும்ப விஷயமாக வைத்து படித்துப் பாருங்கள். கதை வேறொரு இடத்துக்கு உங்களை கொண்டு போய்விடும்.

 

பைத்தியக்காரன்என்றொரு நாடகம் பற்றி கதை வருகிறது.அதில் சிறு . குழந்தைகள்.  பாவாடை, சட்டை, பூபொட்டொடு விளையாட, பைத்தியம் போன்ற ஒருவன் வந்து, ‘எல்லாரும் வீட்டுக்கு போங்க. இல்லாவிட்டால் ஏதோ ஒரு கிழவனுக்கு மணம் செய்வித்து அவன் செத்து போன பிறகு உங்கள் பூ பொட்டை பறித்துவிடுவார்கள்,’ என்கிறான். பிறகு ஒரு சிறுமியை, ‘உன் பூ எங்கே? உனக்கு அப்படி ஆகிடக்கூடாது,’ என அவளுக்கு அலங்காரம் செய்து பூ வைத்து விட்டு , ‘பொட்டு எங்கே. எங்கே.என தேடுகிறான். அய்யா அம்மா யாராவது கொடுங்களேன் எனக் கேட்க, நெகிழ்ந்த நிலையில் உள்ள பார்வையாளர்களிடம் இருந்து குங்குமப் பொட்டுகள் வந்து மேடையில் விழுகின்றன. இது எஸ் வி சஹஸ்ரநாமம் (இவருடைய மாமா) நிஜத்தில் நடத்திய நாடகம்தான்.

 

மறக்க முடியாத பறவை – கதையில் இவருக்கு பரோடா அருங்காட்சியகம் அருகே வகுப்பு. படிப்பின் அங்கமாக டாக்சிடர்மி எனும் பயிற்சி. . பறவைகளை துப்பாக்கியால் சுட்டு  அங்கம் சிதறாமல் அதன் உள்ளே இருக்கும் மாமிசப் பகுதிகளை எடுத்துவிட்டு பஞ்சைப் பொத்தி நிஜ உருவம் செய்வது. இவருடைய நண்பன் ஹுகும்சிங்.

ரயிலில் கிழவி ஒருத்திக்கு தன் இருக்கையை கொடுத்து உதவுகிறான். அடிபட்ட நாய் குட்டியை பிராணிகள் நல காப்பகம் சென்று சிகிச்சை தருகிறான். உச்சி மலையில் உள்ள ஒரு பூவை ஒரு பெண் கேட்டாள் என்று செங்குத்து மலை ஏறி பறித்து வந்து இந்தா என் சகோதரியே என்று தருகிறான். அவன் இந்தியும் ஆங்கிலமும் கலந்துபெசுவது கூட புரிந்து கொள்ள முடியாமல் முன்னுக்கு பின் முரண் வைத்து பேசி ஜோக்கடிப்பான்.

 

 

ஒரு முறை டாக்சிடர்மிக்காக செல்லும்போது புதரில் குருவி குஞ்சுகளை பார்க்கிறான். தாய் பறவை எங்கோ இரை தேட போயிருக்கும் என்று பறவை போலவே சப்தமெழுப்புகிறான்.குஞ்சுகள் வெளியே வரும்போது சட்டென சுடுகிறான். குஞ்சுகள் சிதறி தெறித்தன. உடன் வந்த இவருக்கு கோபமும் ஆவேசமும். குஞ்சுகளை ஏன் அப்படி கொன்றாய் என்று கேட்கும்போது இதை கற்றுகொள்ளத்தானே வந்திருக்கிறோம். தோளில் துப்பாக்கியை மாட்டிக்கொண்டு நீ இதை கேட்பது மிகப்பெரிய ஜோக் என்று சொல்லிவிட்டு போய்க்கொண்டே இருக்கிறான். இப்போது அவன் என்ன செய்து கொண்டிருப்பான் என்று நினைத்து பார்க்க பயமாய் இருக்கிறது என்று கதை முடிகிறது.

 

கொடியின் துயரம் - ஒரு அருமையான கதை. சுதந்திரம் கிடைக்க போகிறது என்ற சமயத்தில் சிறுவர்கள் குதூகலம் கொள்கிறார்கள். ஏதோ கொண்டாட்டம் என்று. கையெழுத்து பத்திரிக்கை, தாயின் மணிக்கொடி பாடல் எல்லாம் ஜோராக நடக்கிறது. ஜேம்ஸ் மாமா மட்டும் உற்சாமில்லாமல் இருக்கிறார். வானொலி பெட்டியில் போர் செய்திகள் கேட்பார். அவர் எங்கோ கிளம்ப ஆயத்தம் ஆவது போல் இருக்கிறது. “மாமா.. சுதந்திர தினத்துக்கு எங்கள் பத்திரிக்கை மாமா” என்றேன். அவர் சந்தோஷ படவில்லை. “எப்படியா.. எனக்கு டமில் படிக்க வராது பையா .. என்னா எழுதிருக்கே ?”

“சுதந்திரத்தை பத்தி “

“அடடே ..சொடந்திரமா ..ஹா. தம்பி இதை நல்லா ஓட்டக் கூடாதா. இப்பவே சொதந்திரம் சைடுலே பிரிஞ்சி கிலியர மாதிர வருதே ..ஹ்ஹ்ஹா என்று பத்திரிகையை கொடுத்தார். அவர் வழக்கமான மாமாவாக இல்லை. திரும்பி வந்துவிட்டோம். பிறகு அவர் ‘சீமை’க்கு போய்விடுகிறார்.

சுதந்திர தினத்தன்று எல்லோரும் கொண்டாடி கொடி ஏற்றுகிறார்கள். கொடி காற்று வீச்சு குறைவால் தளர்ந்துதான் பறக்கிறது. தாயின் மணிக்கொடி பாரீர் பாரதி பாட்டு பாடுகிறார்கள்.  அப்போது சலீம் மாமா அவசரமாக வந்தார். என் மாமா இவ்வளவு லேட்டு. சுதந்திரம் வந்து எவ்வளவு நேரம் ஆயிடுத்து என்று சிரித்தேன். அவர் சிரிக்கவில்லை. எல்லாம் போயிடுத்துப்பா என்று அப்பாவை பார்த்து அழுகிறார். என்ன ஆச்சு தகவல் தெரிந்ததா என்று கேட்க அவர் கேவிக்கொண்டே சொல்ல ‘அய்யய்யோ உன் தம்பி குடும்பமா.. டெல்லீலையா என்று கத்தி விட்டார் அப்பா. தலையை  பிடித்துக்கொண்டார். சிறுவன் மகனிடம் “சலீம் மாமா வுக்கு துக்கம் நிகழ்ந்து விட்டது. இப்போது சுதந்திரம் வந்துச்சுன்னு மார்தட்டிக்கறதா .. மாரடிச்சுக்கறதா தெரியலேடா என்கிறார். பறக்க சக்தி இல்லாம வருத்தமாக தொங்கி கொண்டிருந்தது அந்த கொடி முதல் நாளில் – என்பது இந்த கதை.

 மலைகள் கதையில் மிகவும் ரம்ம்யமான சூழலில் மலையின் மேல் ஏறி செல்வதை விவரிக்கிறார்.. மேலும் சென்று மலையின் அடுத்த பக்கத்தை பார்கிறார்.”ஆலமர நிழலில் இருந்து மலையைப் பருகிக்கொண்டு இருந்தேன்” என்று ஒரு வரி. மலையை அம்மா என்று கூப்பிட வேண்டும் போல இருந்தது. ஆள் அரவமே இல்லாத உச்சிக்கு வந்த பிறகு ஏதோ சலங்கைகள் ஒலிக்கும் சப்தம் கேட்கிறது. சென்று பார்த்தால் நம்பவே முடியாமல் இருநூறு பேர் ஆயுதம் ஏந்தி ஒய்வு இல்லாமல் மலையை மலைப் பாறைகளை தாக்கிக்கொண்டிருந்தார்கள். “ஏதோ கடிகார அசைவுகள் போல் அவர்கள் இயக்கம் சீரான வெறியுடன் இயங்கிக் கொண்டிருந்தன” என்று ஒரு காட்சி படிமத்தை எழுதுகிறார்.  சலங்கை ஒலியல்ல. அவை சம்மட்டி ஒலிகள்.

 எல்லோரும் போய்விட்டார்கள். அந்த திசையை சற்று நேரம் பார்த்தவாறு நின்றிருந்தேன். எந்த எதிர்ப்பையும் காட்டாமல் அதே பெருந்தன்மையுடன் நின்று கொண்டிருக்கும் அந்த மலையை பார்த்து பெருமூச்சு விடுவது தவிர வேறேதும் செய்ய முடியாதவனாக நின்றேன்.  மலையை திருடி பிழைக்கும் மனித சாதிகளுள் நானும் ஒருவன்தானே ! இது உண்மை. எனக்கும் பசித்தது. இதுவும் உண்மைதான். என்கிறது கதை.

 தவளையின் ரத்தம் – கதையில் அதிர்ச்சி. வறுமையில் இருந்த தாத்த தனது பெண்களுக்கு இரண்டாம் தாரம் அல்லது வறுமையான குடும்பம் என்று திருமணம் செய்து கொடுத்தார். அதில் ஒரு அத்தை வசதியாக இருந்தார்.  பர்மா சென்று வரும் மாமா. ஆனாலும குழந்தை இல்லை. பிறகு ஏதோ ஒரு சாமியார் மீது நம்பிக்கை வைத்து அவர் சொற்படி ஏதோ கருப்பு நிற வில்லையை கணவருக்கு தெரியாமல் பாலில் கலந்து தந்துவிடும்படி சொல்ல இவர் செய்கிறார்.. விரைவில் கரு தரிக்கிறார். குழந்தை பிறக்கிறது. வளர்கிறது. ஆனால் எதிர்பாராத விதமாக மாமாவின் சடலம் வீட்டுக்கு வருகிறது. அந்த குழந்தை வளர்கிறான். திருமணம் ஆகி பெண் குழந்தை பிறக்கிறது. ஒருநாள் மகனுக்கு காய்ச்சல் வர டாக்டர் வந்து பார்க்க கை அக்குளில் சிறிய கட்டி இருக்கிறது. அவர் மருந்து சொல்லிவிட்டு போகிறார். இந்த அம்மா சாமியாரிடம் செல்கிறார். ஊர் கண்திருஷ்டி அதுதான் என்று சொல்லி காதில் ஏதோ சொல்கிறார். பிறகொருநாள்  உடல் மோசமாகி போக டாக்டர் வந்து பார்க்க கையை தொட்டாலே ஊளையிடல் போல கத்துகிறான். கையை தூக்கினால் ஏதோ பொட்டலம் போல ஒன்று வந்து விழுகிறது. ரத்தமும் நிணமுமாக வயிருகிழிந்த ஒரு தவளை குஞ்சு அது. யார் இப்படியெல்லாம் செய்தது என்று கேட்கிறார் ஆனால் மகன் உடல் நிலை மோசமாகி இறந்து போகிறான். அதுமுதல் அத்தைக்கு பைத்தியம் போல ஆகிவிடுகிறது. வெள்ளை புடவையுடன் பேத்தியுடன் வந்து நிற்கும் மருமகளை கூட அடையாளம் தெரியவில்லை.

 ஒரு கொத்துப் புல் – கதை கேதார்நாத் செல்லும் பயண அனுபவத்தில் ஒரு விஷயத்தை வைக்கிறார். மலையேற்றத்தால் ஆக்சிஜன் பற்றாக்குறையால் ஒரு முதியவர் மயக்கம் போடுகிறார். மருத்துவம் நடக்கிறது. இவருக்கும் ஆஸ்த்மா என்பதால் முன்னெச்சரிக்கை மருத்துவம். ஆனால் இவர்களுக்கு அந்த குதிரை இவ்வளவு உச்சிக்கு நடப்பது குறித்து அனுதாபம் இருக்கிறது. குதிரைக்கு தரப்படும் மாவுருண்டை உணவு, அது சோர்ந்துபோகாமல் நடப்பது போன்று பலவும் சொல்லி திரும்பும்போது நிலச்சரிவில் ஒரு குதிரை பின்னங்கால் பாறையில் சிக்கி இறந்து போயிருக்கிறது. வாயில் ஒரு கொத்து புல் அப்படியே இருக்கிறது. இந்த குதிரைக்கு மரணம் விடுதலை என்று ஒருவர் சொல்ல அது விடுதலை என்று நாம் எப்படி முடிவு செய்யமுடியும். இந்த வாழ்க்கையை அது வெறுத்தது என்று நாம் சொல்வதற்கில்லை. அதன் வாயில் தின்னப்படாமல் இருந்த கொத்துபுல் வாழ்க்கையின் தீராத பற்றை எனக்கு சொல்லிக்கொடுத்தது என்று ஒரு வரி இந்த கேதார்நாத் பயணத்தின் மீது வைக்கும் விமர்சனமாக கூட பார்க்க முடிவது.

 ஊரில் இரண்டு காளி – ஓவியர்களை ஓவிய உணர்வை ரசனையை மையமாக வைத்து எழுதப்பட்ட கதை. இப்படியான கதைகளை எழுத எஸ்.வைதீஸ்வரன் போன்றவர்களுக்கு முழு தகுதி உண்டு. நெருக்கமான ஓவிய கல்லூரி வகுப்பு நண்பர்களான ஓவியன் அம்ரீஷ் சிற்பம் படிக்கும் சவிதா நிறைய விவாதிப்பார்கள்.  அம்ரீஷ் காளியை வரைகிறான். ‘சக்கரங்கள், அரை வட்டங்கள், மின்னல் போல கோடுகள், கிழிந்த நிலையில் மிருக முகங்கள், அங்க திரட்சிகள், சிகப்பு நீலம் வெண்மை மஞ்சள் என் எதிரெதிர் பற்பல வண்ணங்கள் ஓவியத்துக்கு ஒரு கட்டுக்கோப்பை தந்தது.’. இது என்ன விதமான கற்பனை எனும்போது காளி என்ற உருவத்தை கற்பனை செய்யும்போது இந்த கற்பனையை வழிபட சாத்தியம்தான் என்கிறான். ஆதார சக்தியாக உள்ள அதான்த்ரீக அடிப்படைகள் மூலம் உண்டான ஓவியம் என்பதை சொல்கிறான். இரு எதிரெதிர் வண்ணங்கள் இணைவது போல வாழ்வில் நல்லது தீயதும் இணைந்துதான் இருக்கிறது என்றெல்லாம் விவரிக்கிறான். அதை தான் உள்ள விடுதியின் வெளியே மாட்டுகிறான். காளியை வணங்குபவர்கள் இதையும் வணங்குவார்கள் என்று நம்புகிறான். ஆனால் கலையம்சம் தெரியாத முரடர்கள் அவன் இல்லாதபோது வந்து அதை கிழித்து அலங்கோலம் செய்து விடுகிறார்கள். அவன் தங்கி இருக்கும் விடுதியில் கட்டுப்பாடுகள் அதிகம். பிறகு தனது தோழியை நிர்வாண மாடலாக வைத்து ஒரு கலைப் படைப்பை உருவாக்குகிறான். ஆனால் அவன் பெண்களை கூட்டி வந்து தப்பு செய்கிறான் என்று அவனையும் அவன் அறையையும் நிர்மூலமாக்குகிரார்கள். அந்த வருடம் நிர்வாண பெண் சிற்பம் வடித்த சவிதாவுக்கு பதக்கம் கிடைக்கிறது. கலை விமர்சகர்கள் அதை பாராட்டிக் கொண்டிருக்கிறார்கள்.

 -------------------------------------------------------------------------------------------------------------------------------------------

சில அழகிய வரிகளை மட்டும் சொல்லிவிட்டு கட்டுரை முடியட்டும்.

ஆலமர நிழலில் இருந்து நிழலை பருகிக் கொண்டிருந்தேன்

நாவல்பழ நிற மேனியுடன் ஓவியத்தில் உட்கார்ந்திருக்கும் பழங்குடிப் பெண்

அந்த ஓவியங்களை யதார்த்தத்தை சற்றே கலைத்துப் போட்டுவிட்டு ..

தெருக்களை அற்புதமாக காட்டுவது வெளிச்சம் மட்டுமல்ல. அதற்கு பின்னணியில் திரையிட்டிருக்கும் இருட்டும்தான்.

ஒளியின் மெல்லிய குறுகலான முனகல்தான் இருட்டு

அங்கே போகும்போது பூக்களை பறிக்க மாட்டேன். தொட்டு தொட்டு பார்ப்பேன்

-------------------------------------------------------------------------------------------------------------------------------------------

தொகுப்பில் கதைகள் வெளியான வருடம் குறிப்பிட்டிருக்கலாம். இப்படியான நீண்ட கால நீட்சியை தொகுக்கும் கதையம்சத்துக்கு அது முக்கியமான ஒரு வாசிப்பு உதவிக் கருவி.

முன்னட்டையில் உள்ள எழுத்தாளர் புகைப்படத்தை பின்னட்டையில் போட்டு, முகப்பு அட்டையில் நல்லதொரு ஓவியத்தையோ அல்லது நவீன டிசைனையோ  அமைத்திருக்கலாம் என்று தோன்றியது. இவர் எழுத்தாளரும் மட்டுமல்ல ஓவியரும் கூட.

 ஐம்பது வருட காலத்தை, அதன் மெதுவான மாற்றத்தை அடக்கி இருக்கக்கூடிய ஒரு புத்தகப்பெட்டி இது.

இயற்பியலின் தாவோ - பிரிட்ஜாஃப் காப்ரா

இயற்பியலின் தாவோ பிரிஜாப் காப்ரா Fritjof Capra மொ பெ போன். சின்னத்தம்பி முருகேசன் சந்தியா பதிப்பகம் #இயற்பியலின்_தாவோ படிக்கத்  துவங்கி இர...