Wednesday 13 May 2020

தயா - லாசரா



தயா
லா ச ரா
வானதி பதிப்பகம் 1993
தி நகர் சென்னை 17
044 2434 2810

தொகுப்பில் எட்டு கதைகள். எல்லாமே பெருமளவு பேசப்பட்ட கதைகள். தயா, சுருதி, நேரங்கள், மாயமான், ராணி, ஜிங்லி, மன்னி, பிராயச்சித்தம்.
லாசரா-வின் தயா தொகுப்பில் மன்னிசிறுகதை. அடிக்கடி லாசராவை சென்று வாசிப்பது ஒரு நல்ல அனுபவமாகவே இருக்கும். மொழியின் மயக்கம் இருந்தாலும் அதில் மயங்குவதற்கு காத்திரமான விஷயத்தை அதன் பின்னால் வைப்பவர்.  ஒரு நான்கு கதைகள் பற்றி மட்டும் (நீளம் கருதி )
தயா
‘தயா’ சிறுகதையில் கல்யாண வீட்டில் பட்டாம் பூச்சி போல வளைய வரும் தயா எனும் பெண்ணை -  யார் இவள் இவ்வளவு சுறுசுறுப்பாக பொறுப்பாக என்று கேட்டு அழைத்து நீ பெண் வீடா பையன் வீட என்று கேட்க அப்படி ஒரு பிரிவு இங்கு இருக்கிறதா என்ன என்று கேட்டு அசர வைப்பவள் – கொடுத்து வைத்த உன் புருஷன் யார் என்று விசாரிக்க, சட்டென்று சுடர் அணைந்த விளக்காக ஆகி இருளில் முகப் புதைத்துக் கொள்கிறாள். அவள் தனது மற்ற இரண்டு சகோதரிகளோடு தம் மூவரின் துரதிருஷ்டத்தை பற்றி அம்மாவுடன் பேசிக்கொள்கிறாள். இவள் கணவன் திருமணத்தன்றே வீட்டை விட்டு ஒரு சாதுவுடன் வெளியேறியவன் எட்டு வருடமாக திரும்புவதில்லை. தனது அண்ணன் அண்ணியோடு இருக்கும் இவள் பிச்சைக்கரனுக்கு சோறிடும் வழக்கத்தை குறை காண்கிறார்கள். ஒரு நாள் இரவு தான் சாப்பிட்டுக்கொண்டே இருக்கும்போது அன்னப்பிச்சை என்று வருபவனுக்கு சோறிட அவசரமா செல்பவளை அப்படி என்ன அவசரம் என்று கேட்டு வெளியே செல்கிறான் அண்ணன். சோறிட வேண்டாம் இன்றைய “பாரு யார் வந்திருக்கிறார் என்று” (பாழு பாழு யாழ் வந்திருக்கான்னு என்று அழுகையின் குரலை எழுதுகிறார் ) அழுகிறாள். பார்த்தவனுக்கு முட்டியின் கீழ் கால் விட்டது என முடிக்கிறார். குருட்டு நம்பிக்கைகள்தான் பலருக்கும் ஒரே ஆதரவாக இருக்கிறது. அதில் அறிவுக்காரனங்கள் செல்லுபடியாவதில்லை.

நேரங்கள்

குறும்பு செய்யும் குழந்தையின் அப்பாவாக இருக்கும் ஒருவரது கதை. அலுவல்கள் சூழல் போன்றவை சொல்லப்படுகிறது.  சாலையில் இருந்து கடக்கும் ஒருவனை பற்றிய நினைவு வந்து மனம் தவிக்கிறது. தானே அதுவாக ஆனது போல. பிறகு மழை கொட்டும் நள்ளிரவில்  நண்பனின் மனைவிக்கு பிரசவ வலி ஏற்பட ரிக்ஷா இல்லாமல் மாட்டு வண்டிக்காரன் மாடு மழையில் வராது என்று வண்டியை மட்டும் தர தானே அதை இழுந்து வந்து ஆஸ்பத்திருக்கு அந்த பெண்ணை அழைத்து போக பாதி வழியிலேயே ஒரு திண்ணையில் பிரசவ நடக்க மறுநாள் சின்னஞ்சிறு குழந்தை காண்கிறான். அதன் கண்களை பார்க்க தானே ஆழ்கிறான். நேற்று இறந்தவனும் நானே. இன்று பிறந்தவனும் நானே என்பதாக ஒரு உணர்வு மேலிடுகிறது. மிகவும் தத்துவார்த்தமான இந்த பொறி இந்த கதையில் சரியாக வெளிப்படவில்லை என்றே தோன்றுகிறது.

மாயமான்
கண்டிப்பான அப்பா. அடக்கமான மகன். நோயுற்ற அம்மா. நீண்ட நாள் கழித்து வாலிபனாக ஊருக்கு வருகிறான். வீட்டு சமையில் செய்யும் பெண்ணின் மகள் தற்போது வளர்ந்து பெண்ணாக இருப்பதை கண்டு கிளர்கிறான். ஆனால் அவன் கண்ணில் படாமல் அவளை வைக்கிறார்கள். ஆனாலும் அவள் மீது ஈர்ப்பு உண்டாகிறது. ஆனால் சமையல் மாமி மூலம் அப்படி ஒரு உறவு சாத்தியமில்லை என்ற குறிப்பு தெரிகிறது. அபிதாவின் நாயகி பெயர் சக்கு தான் இதிலும். கதையெல்லாம் இல்லை. ஒரு அருமையான வரிக்காகவே இந்த கதையை மறுபடி மறுபடி படித்தேன். சக்குவை காண மாடி மேல் அவன் தவித்துக்கொண்டிருக்கிறான். இனி லாசரா வரிகளில் –

“இனி என்னால் ஒரு நிமிஷமும் பொறுக்க முடியாது.
இதோ அவள் திடுதிடுவென மாடி ஏறி வரும் சப்தம் கேட்கிறது. எனக்கு பரபரப்பு தாங்க முடியவில்லை. எழுந்து வந்து என் அரை வாசலில் நிற்கிறேன். மாடி வளைவிலிருந்து படிக்குப்படி படிப்படியாய் அவள் உருவம் உயருகையில் மூழ்கிய கோபுர வெள்ளம் வடிந்து கலச தரிசனம் ஆவது போல் வெளிப்படுகிறாள்”

மன்னி
திருமணப் பெண்ணின் குரலில் சொல்லப்படும் இந்த கதையில் திருமணத்திற்கு தன்னை பெண்பார்க்க வரும் நிகழ்வில் ஆரம்பித்து, பையனின் அம்மா மூலம் கொஞ்சம் பேசவைத்து, பொதுவாக பெண்ணை பாடச்சொல்லும் இடத்தில் பையனுக்கு மிக நன்றாக பாடத்தெரியும் என்று சொல்லி, திருமணத்தின் நாள் குறித்து கேட்டு, பையன் சம்பத்தின் மன்னி திருமணம் சீக்கிரம் காணவேண்டும் என்று அவசரப்படுத்துவதை சொல்லி, கல்யாணம் பற்றி கவலை இல்லாமல் சீட்டு விளையாடும் அப்பாவை பற்றிய புகார்களை சொல்லி, ரயிலுக்கு கிளம்பும் போது சீக்கிரம் நடக்க வேண்டும் என்று மன்னியின் செய்தியாக சொல்லி, மன்னி கூட நன்றாக பாடுவாள் என்று சொல்லி, மன்னிக்கும் கொழுந்தனுக்கும் உள்ள ஸ்னேக பூர்வமான உறவை குறிப்பாக சொல்லி (ஒரு வார்த்தை கூட அதை பற்றி வெளிப்படையாக இல்லாமல்) மன்னிய போல தனக்கு மனைவி வாய்க்கவேண்டும் என்று அவன் விழைவதாக சொல்லி , யார் அந்த மன்னி என்று திருமணப் பெண்ணுக்கு யோசனை ஏற்படும்போதே வாசகனுக்கும் உண்டாக்கி, திருமணத்தன்று கூட அவளை முழுதாக காண முடியாமல் போவதை சொல்லி, திருமண முதல்நாள் இரவு உறக்கம் பிடிக்காமல் இவள் வரும்போது பூஞ்சையாக உறக்கம் பிடிக்காமல் இருக்கும் ஒரு உருவத்தை பார்த்து, பிறகு அவளை கண்ணிலேயே காணவில்லை என்று சொல்லி, திருமணம் முடிந்த கையேடு மஞ்சள் நனைத்த புடவையுடன் ஆசீர்வாதம் வாங்க மாமியின் அறைக்கு சென்றால் அது பூட்டி இருக்க, அவசரமாக ஆபீஸ் வேலை என்று அண்ணாவுடன் அம்மாவும் கிளம்பி போனார் என்று சொல்லி, தனது பொருட்களை கட்டிக்கொண்டு கணவனுடன் புது கணவனுடன் அவன் வீட்டுக்கு போனால் வாசலில் திருமண தம்பதியை வரவேற்கும் எந்த தடயமும் இல்லாமல் போக வெளியே நிற்கும்போது அம்மா எதிர்கொண்டு அழைக்க வருகிறாள்.
கதையின் இறுதி பகுதியை லாசராவின் வரிகளிலேயே
“.. ஆரத்தியுடன் காத்திருப்பார் யாருமில்லை. உள்ளே போவதா. வாசலில் நிற்பதா ? ஒன்றுமே புரியவில்லை
அம்மா
அம்மா உள்ளிருந்து வருகிறார். இரு கைகளிலும் சற்று நீளவாக்கில் ஒரு மூட்டையை ஏந்தியபடி நேரே என்னிடம் கொடுக்கிறார். என் திகைப்பில் என்னென்று புரியாமலே வாங்கிக்கொள்கிறேன். சுற்றிய துநியிளில்ருந்து முஷ்டித்த இரு பொம்மைக் கைகள் நெளிகின்றன.
அம்மா கணங்களில் கண்ணீர் வழிந்து கொண்டே இருக்கின்றது. உதடுகள் நடுங்குகின்றன.
மன்னீ... !
என் பக்கத்திலிருந்து கிளம்பிய வீறல் என் கணவருடைய குரலாகவே தெரியவில்லை. அவர் வாயினின்று ஒரு பக்ஷி பறந்து போன மாதிரி எனக்கு தோன்றிற்று.
பிறகு அவர் பாடிக் கேட்டதாகவே எனக்கு ஞாபகமில்லை.
==
கையளவு அகல புத்தக வடிவின் இருபது பக்கங்களுக்குள் கதை ஆரம்பித்து முடிந்து புத்தகத்தை அவள் கையில் திகைப்புடன் வைத்திருக்கும் சிசுவைப்போலவே நம் கையில் புத்தகம் இருக்கிறது.
அந்த பழைய நாட்களின் குடும்ப மற்றும் பேச்சு வழக்கங்களை, நடப்பியல்புகளை வைத்து புரிந்து கொள்ள வேண்டும். அதற்கு கதையிலேயே நிறைய இடங்கள் உண்டு.
மிக இளவயதில் திருமணம் செய்வதால் திருமணம் பற்றிய கனவு ஆண் பெண் இருவருக்கும் இருப்பதுண்டு. அவற்றை வெளிப்படையாக சொல்லும் பக்குவம் வரும் முன்பே திருமணங்கள் நடந்து விடும். தனியாக ஒரே மகளாக இருக்கும் பெண்ணுக்கு அவளது எண்ணங்களே அவள் துணை. அவளது கற்பனைகளே அவள் தோழி. அதில் சிறுமிக்கும் மங்கைக்கும் இடையே உள்ள ஒரு மிதப்பு இருக்கும். இதில் திருமணம் நிச்சயம் ஆனபின்பு கூட வீட்டை விட்டு நகராமல் சீட்டு விளையாடிக்கொண்டிருக்கும் அப்பாவை எரிச்சலுடன் கண்டிக்கும் அம்மாவின் குரலோடு சேர்ந்து இவளுக்கும் வெறுப்பு வரும். ஏண்டி முகூர்த்தத்தை குறிச்சு கூட எழுதிட்டேளே.. உங்காத்து மாமா சும்மா உக்காந்துண்டிருக்காரே. ஐப்பசிலயாவது நடக்குமா.. தைக்கு தள்ளிண்டு போயிடுவேளா என உடனிருக்கும் தெரு மாமிகள் கேட்பதை சொல்லி அப்பாவை கேட்கிறார்.
சீட்டாடிக்கொண்டிருக்கும் அப்பா சுவாரசியமாய் சீட்டை மாற்றி வைக்கிறார்”. அப்பா உங்களை கரிக்கிறேன். என்னதான் ஆண்களுக்கு ஆயிரமே நாங்கள் அடங்கினவர்கள் ஆனாலும் எங்களுக்குரிய மரியாதை எங்களுக்கு கிடைக்காத என்ன ?” என்று கோபமுறுகிறாள்.
கதையின் சில பக்கங்களில் திருமணத்துக்கான வேலைகள் நடக்கின்றன. திருடன் கொண்டு வைத்துவிட்டு போன மாதிரி சாமான்கள் சேர்ந்து கொண்டிருக்கின்றனஎன்று திருமண களைகட்டும் சூழலை சொல்லி பந்தலின் அடைப்பில் வாசல் திண்ணை திடீரென இருள்கின்றது. இந்த இருள் எவ்வளவு இன்பமாயிருக்கின்றது!என்று மிக துல்லியமான ஒரு உணர்வு வரிகளை எழுதுகிறார்.
பிறகு இவள் பேசி பேசி நாங்கள் எங்க ஆதங்கத்தை பேசினாலும் மழுங்குனி என்ற பெயரோடு எல்லா வேலைகளையும் அமைதியாக செய்து வைத்திருக்கும் அப்பாவை அவள் மனம் சொல்கிறதுஅப்பா . இப்போ உங்களை பார்க்க எனக்கு எவ்வளவு ஆசையாயிருக்கு தெரியுமா?”
இந்த கதையில் இப்படியான நுட்பமான உணர்வுகளை பல இடங்களில் பல வரிகளில் காண முடியும். தற்போதைய சூழலில் மேலே சொன்ன அந்த அறியா வயதுபெண்ணின் அந்த அப்பாவித்தனம் கொண்ட ஆனால் திருமண விழைவுடன் கூடிய உணர்வு ஊசலை வைத்து இருபது பக்க சிறுகதை எழுத முடியும்.

No comments:

Post a Comment

இயற்பியலின் தாவோ - பிரிட்ஜாஃப் காப்ரா

இயற்பியலின் தாவோ பிரிஜாப் காப்ரா Fritjof Capra மொ பெ போன். சின்னத்தம்பி முருகேசன் சந்தியா பதிப்பகம் #இயற்பியலின்_தாவோ படிக்கத்  துவங்கி இர...