Sunday 19 April 2020

இடபம்-பா.கண்மணி - எதிர் வெளியியிடு

இடபம்
பா . கண்மணி எதிர் வெளியியிடு
ஏற்றத்தில் இருக்கும் பங்கு சந்தையை காளை என்பர். இறக்கத்தை கரடி என்பர். ரிஷபம் என்ற காளையின் பசுந்தமிழாக 'இடபம்'. ஒரு இளம் பெண்ணின் முகத்தை செய்தித்தாளின் பங்குச்சந்தை பக்கத்தின் வெட்டுப் பக்கங்கள் கொலாஜாக மறைத்திருக்கும் அட்டைப்பட ஓவியமே நாவலை மெலிதாக கோடிட்டு காட்டிவிடுகிறது.

பங்கு மார்க்கட் உலகின் பின்னணியை, அதில் ஈடுபட்டிருக்கும் ஒரு பெண்ணின் குரலில் நாவலை எழுதி இருப்பது. நானறிந்தவரை தமிழ் இலக்கியத்துக்கு புதிது. வரவேற்கவேண்டும். ). சுயமாக தனது காலில் நிற்கவேண்டும் என்ற வெறியோடு உள்ள பெண், வணிகம், வேலை, நட்பு, காமம், பாலியல் சுதந்திரம் என் அனைத்தையுமே தனது சுதந்திரமாக கொண்டு ஓடைபோல வாழத்துவங்கும் ஒரு காஸ்மோ பெருநகரப் பெண்ணின் சித்திரம் நாவல் .

உயர் விழுமியங்கள் ஏதுமற்று பாலியல் சுதந்திரத்துடன் கட்டில்லா வாழ்வை மோகிக்கும் பெண்ணின் வாழ்க்கை என்றோ , ஆண்கள் உலகம் கட்டமைக்கும் விதிகளை மீறி அவர்களை நிராகரிக்கும் பெண்ணின் வாழ்க்கை முறை என்று இரு துருவமாக புரிந்துகொள்ள வாய்ப்புகள் அதிகம். ஆனால் அது அப்படி ஒற்றை பரிமாணம் கொண்டது அல்ல.

நாவலில் சில இடங்களில் அவளுக்குள் இருக்கும் சமூகத்தின் பொது மன மதிப்பீடுகள் அவளை அமுக்க முயலும்போது அதை கருணை இல்லாமல் தூக்கி எறிகிறாள். பெற்றோரால் நிச்சயிக்கப்ட்ட திருமணத்தை ரத்து செய்கிறாள்; சலனமுற்ற பெற்றோர் தனது அண்ணன் இருக்கும் சென்னைக்கு செல்ல முடிவெடுக்கையில் தான் மட்டும் பெங்களூரில் இருக்க தீர்மானமாக சொல்கிறாள்; அந்த வீட்டை விற்றுக்கொள்ளுங்கள் என்று சொல்லி, அவர்களது விருப்பத்திற்கு உடன்படாத நான் அவர்களது வசதியை அனுபவிக்க உரிமையில்லை என்று வாடகை வீட்டில் இருக்கிறாள்; கல்லூரி படிப்பை முடித்துவிட்டு வசதிமிக்க (சேட்) தனது கல்லூரி நண்பன் முதலாளியாக உள்ள அலுவலகத்தில் பணிக்கு சேரும் அவள் பகுதிநேர பங்கு வர்த்தகத்தில் ஈடுபடுகிறாள். தனக்கான சுய முகத்தை உருவாக்கிக்கொள்ளும் முனைப்பில் பொருளாதார வெற்றி பெறுகிறாள்.

தனது சிநேகிதியுடன் நாடகத்துக்கு செல்லும் அவள் இடைவேளையில் அலுவலக ஆண் நண்பனை பார்த்த பின் வயிறு சரியில்லை என்று சிநேகிதிக்கு வாட்சப்பில் பொய் செய்தி அனுப்பிவிட்டு அவனோடு வெளியே சென்று சுகிக்கிறாள்; வெவ்வேறு சந்தர்ப்பங்களில் ஆண் துணைகளோடு பாலியல் சுகங்களை பெறுகிறாள்; தருகிறாள்; தவிர்க்கிறாள்; புகைக்கிறாள்; சீண்டுகிறாள்; தன்னை விட இளைய வாலிபனிடம் முதல் பார்வையிலேயே தன்னை தந்துவிட உடன்படுகிறாள்; அவனோடு மனதொத்த வாழ்க்கை தொடரும் என்ற கனவு துளிர்க்கும் நாளில் அவன் ஒரு வார்த்தை கூட சொல்லாமல் மறுநாளே ஊருக்கு போய்விடுகிறான்; அவன் திருமணம் செய்துகொண்டு விட்டு பின்னொரு நாளில் வரும்போது அவனோடு மறுபடி கூடுகிறாள்; அனுபவம் கொண்ட சிலர் சொல்லும் முதலீட்டு அறிவுரைகளை மீறி நஷ்டப்படுகிறாள்; இறுதியாக நம்பிக்கையுடன் தான் நடத்தப்படும் நண்பனே முதலாளியாக இருக்கும் நிறுவனத்தில் அனுமதி இல்லாமல் பணத்தை எடுத்து தனது சொந்த பங்கு முதலீடு செய்கிறாள்; பெரிய லாபம் சம்மதிக்கிறாள்; பிடிபடும்போது அதை திருப்பி தந்துவிட்டு வெளியேறுகிறாள். தான் எடுத்த பணம் கருப்பு பணம் என்ற தைரியமும், நீ ரியல் எஸ்டேட் வணிகத்தில் விளையாடி சேர்த்த பணத்தின் ஒரு பகுதியை எடுத்து நான் விளையாடி ஜெயித்து அதை திரும்ப தந்துவிட்டேன்; அதையும் கமிஷனோடு சேர்த்து என்ற சமாதானம் - கொன்றால் பாவம் தின்றால் போச்சு - அவளுக்கு போதுமானதாக இருக்கிறது. பொதுமனம் சொல்லும் குற்ற உணர்வுகள் என்பது ஒரு துளியும் இல்லை. அதுவே அவளது உரம்.

பங்கு வர்த்தக துறைசார்ந்த சொற்களை, விவரத்தை உரையாடல் மூலமும், சில இடங்களில் அடிக்குறிப்பொருள்களோடும் விளக்கிப்போகிறார், கண்மணி . உதாரணமாக பங்குகளின் விலை ஒவ்வொரு நிமிடமும் மாறிக்கொண்டே இருப்பதற்கு 'விலையசைவு' என்று அழகான சொல்லைத் தருகிறார். ஒரு பங்கின் விலை தடதடவென சரிந்து கொண்டே போவதை falling knife என்ற வர்த்தக உலக சொல்லுக்கு, விழும் கத்தியை பிடிக்காதே என்று உரையாடலில் குறிப்பிடுகிறார். வீழ்ச்சியில் இருந்து மேலும் சந்தையை "சந்தை குணமாகும்போது" என்று அழகிய பிரயோகம் ஒன்றை சொல்கிறார்.

இடங்களின் தன்மையை அது பற்றிய விவரங்களால் உருவாக்குகிறார். பெங்களூரு கேளிக்கை விருந்து செல்லும் இதத்திற்கு அங்குள்ள கொரியன் புல்வெளி, நீண்ட பிரெஞ் ஜன்னல், பெண்களுக்கான மெலிந்த சிகரெட்டுகள், சுவீடிஷ் கண்கள், உயரம் குறைந்த பெரும் பணக்காரன் ஒருவன் தரும் விருந்துக்கு அவனோடு கைகோர்த்துக்கொண்டு வரும் அழகி தனது உயரம் காரணமாக குதிகால் செருப்பை தவிர்த்து வருதல், விருந்தை பொழுது போக்காக கருதும் பணக்கார பெண்கள் உப்பிய கண்கள் அடியில் விழும் கீழிமைப்பை போன்று பலவற்றை கவனித்து எழுதுகிறார்.

மேடு பள்ளங்களில் விழுந்து ஓடும் நீரைப்போலவே பேச்சுமொழி நிதானமாகவும், சீறியும், சுழித்தும், எகிறியும், விழுந்தும் ஓடுவது ஒருவிதத்தில் அவளது மன நிலையை கூட குறிக்கிறது. நைச்சியமாக, நட்பாக, கவித்துவமாக, அரசியலாக, சீண்டலாக, காமமாக, மோகமாக, கோபமாக, வெளிப்படையாக, தீர்மானமாக, விவேகமாக - என எல்லாமாகவும் வெவ்வேறு இடங்களில் துலங்குகிறது.

சில இடங்களைக் குறிப்பிட வேண்டுமென்றால் -
* 'நேருக்கு நேர் பார்க்கையில் வீற்றிருக்கும் மௌனத்தைவிட தொலைபேசியில் சீறும் மௌனத்திற்கு வீரியம் அதிகம் "
* 'ஒரு நாள் படுத்து எழுந்திரிக்க எதுந்திருக்க எதுக்குடா இத்தனையும் கேக்குற ?"
* "அந்த தோள்களுக்கு என் பிசகுகளை மட்டும் அல்ல, பிறழ்வுகளையும் தாங்கும் உறுதி வேண்டும்"
* தொலைகாட்சி விவாதங்கள் பற்றி "சிறு பொறியை ஊதி பெருக்குவதையே தொழிலாக கொண்டவர்கள்"
* “பங்குகள் மீது பற்று வைக்க கூடாது என்பது சந்தையின் விதியாகும்”
* காபி டே வில் காபி குடிக்கையில் சித்திதார்த்தாவின் ரத்த வாடை என்று ஒரு சமகால வணிக வரி கச்சிதமாக வருகிறது

சில கவித்துவமான இடங்கள் நாவலில் உள்ளன.

* கல்யாணத்துக்கு பூங்கொத்து தருவதில் விருப்பமில்லை. ஓராயிரம் மலர்களை கொல்வதில்லை சம்மதமில்லை
* பழுப்பு நிறத்தில் வெள்ளை புள்ளியிட்ட பிறகு ஒன்றை பெயர் தெரியாத பறவை தான் வந்து சென்றதன் அடையாளமாக விட்டு சென்றிருந்தது"
* "என்னை ஒற்றைக் காலணியாய் உணர்ந்தேன் "

தன்னுடைய சிறு வயதில், ஆண் என்பதால் அண்ணனுக்கு ஒரு சலுகையும் பெண் என்பதால் தனக்கு சலுகை மறுப்பும் இருப்பதை நாவலில் நினைவு கூர்ந்த படியே இருக்கிறது அவள் மனம். வழக்கமான திருமண வளைக்குள் அடைபடாமல் ஆணுக்கு நிகராக - என் அதைவிட அதிகமான பொருளாதார சுதந்திரமே விடுதலை என்று ஒரு விதை மனதில் விழுகிறது. அதன் பெருங்கிளைப்புதான் ‘இடபம்’.ஆனால் இந்த பொறியை கவனிக்க விடாமல் நாவலின் ஓட்டம் வேகமெடுத்திருக்கிறது என்றே தோன்றுகிறது. நாவலில் மெலிதான அந்த பொறிகளை நிதானமாக கவனிக்கையில்தான் அவளது குணச்சித்திரத்துக்கான அடிநாதம் என்ன என்பது பிடிபடும். நாவலின் மூலமாக அவளையும், அவள் மூலமாக நாவலையும் புரிந்து கொள்ள முடியும்.


                                                                       - 0 -  

No comments:

Post a Comment

இயற்பியலின் தாவோ - பிரிட்ஜாஃப் காப்ரா

இயற்பியலின் தாவோ பிரிஜாப் காப்ரா Fritjof Capra மொ பெ போன். சின்னத்தம்பி முருகேசன் சந்தியா பதிப்பகம் #இயற்பியலின்_தாவோ படிக்கத்  துவங்கி இர...