Monday 20 April 2020

கிருஷ்ணனின் ஆயிரம் நாமங்கள் - போகன் சங்கர் - கிழக்கு பதிப்பகம்

கிருஷ்ணனின் ஆயிரம் நாமங்கள்
 போகன் சங்கர்
 கிழக்கு பதிப்பகம். சென்னை
044-4200-9601 



கிருஷ்ணனின் ஆயிரம் நாமங்கள் தொகுப்பில் உள்ள கதைகளில் ஏறக்குறைய மூன்று விஷயங்கள் ஊடுபாவி அலைகின்றன - குழந்தைகள் , மரணம் , மெல்லிய காமம். அவை நெடிஅடிக்காமல் புதுப் புத்தகத்தின் வாசனை போல மெல்ல கசிகிறது.

குறிப்பாக கிருஷ்ணனின் ஆயிரம் நாமங்கள் கதை பற்றி கொஞ்சம்.

உம்மிணி சேச்சி அழகும் - சற்று வசீகரமும் - தைரியமும் கொண்டவள். அவள் வரையும் கிருஷ்ணன் கோலம் பிரசித்தமானது. நின்று ரசிக்காதவர்களே இல்லை. நிறைய பெண்கள் கோலமிடுகிறார்கள் ஆனால் சேச்சி கோலம் போடுவதற்காகவே பிறந்தவள் என்பது கதையின் முதல் வரி. இவை கதையில் வரும் குறுப்பு, பணிக்கர் மற்றும் கதை சொல்லியால் ஆங்காங்கே குறிப்பிடப்படுகிறது. கோலம் போடும்போது அவளது வாளிப்பை குறுப்பு பார்த்துக்கொண்டே பைபிளை இறுக்கி அணைத்துக்கொண்டு போவார். அவள் வரையும் கிருஷ்ணனை நோக்கி அவளது ஸ்தனங்கள் பாய்கின்றன என்பார் பணிக்கர்.

அவளுடைய கணவன் பெரும்பாலான அழகுணர்ச்சி உள்ள கதைப் பெண்களின் கணவர்களை போலவே சுவாரஸ்யமற்றவன். சமையல் வேலை. உடல்மேல் எப்போதும் ஊசக்குழம்பு வாசம் வரும். அவன் ஒரு 'பொட்டன்' . கிருஷ்ணனும் தெரியாது கோலமும் தெரியாது" என்கிறார் பணிக்கர். உம்மிணியை அவன் பொட்டி திறக்காத சேச்சியாகவே வைத்திருந்தான்" என்ற வரி போதுமானது. அங்குள்ளவர்களுக்கு சேச்சி மேல் ஒரு ஏக்கம் உண்டுதான். பெண்களின் காமம் ஊறல், அவர்கள் பெற்றுவிடக்கூடிய தீவிரத்தின் சாத்தியங்கள் எல்லாம் பேச்சினூடே சொல்லப்பட்டு விடுகின்றன. உம்மிணிக்கு நாமெல்லாம் தான் உதவி வேண்டும் என்று பணிக்கர் சொன்னபோது எல்லோரும் உரத்த குரலில் ஆமோதித்தாள் என்றும் போகனின் நையாண்டி சரியான இடத்தில் விழுகிறது. இங்கிருக்கும் கிருஷ்ணர் தொப்பையும் சாளேஸ்வரமும் விழுந்துவிட்டவர்கள் என்கிறார். ஆனால் வாலிபர்களைக்கூட அவள் பொருட்படுத்துவதில்லை. ஒருவனையும் கிருஷ்ணனாக ஏற்கவில்லை. அவளைக் கண்டாலே அனைவருக்கும் அச்சம்.

இப்படி கதை நகரும்போது இரண்டு மூன்று நாட்களாக அவளுடைய தினசரி கோலம் காணவில்லை. அவளையும் காணவில்லை. அவளது கோலம் தினம் தினம் ஒரு கிருஷ்ணன் படம்தான். ஒரு நாள் போல மறுநாள் இருக்கமாட்டான் அந்த கிருஷ்ணன். ஆயிரம் முறை போட்டாலும் அதற்கு பிறகும் புதிதாக போட சாத்தியத்தை கொண்டிருந்தவள் உம்மிணி. இதை வெறும் கோலமிடும் திறன் என்று இல்லாமல் தினமும் பெருகும் அவளது கிருஷ்ண கனவு எனலாம். புது புது கிருஷ்ணன் எனும்போது அவளது அடங்க இயலாத ஆசைகள் கோலங்களாக உருப்பெறுவதாக நாம் காண்கிறோம். காணாமல் போன அவளை தேடுகிறார்கள். அவள் கோலப்போட்டியை கூட காலி செய்துகொண்டு போய்விட்டாள். ஆனால் அவள் புருஷன் அதை கண்டுகொள்ளாமல் நடமாடி வந்தான்.நிறைய பேருக்கு வருத்தமும் ஏமாற்றமும். ஒருவாறாக அவளும் அவளளது கோலமும் இல்லாத வேட்டை அவர்கள் பழக துவங்கிவிட்டனர். பின்பு ஒரு நாள் ஒரு மழையின் போது குழித்துறை நதியோரம் உடலாக - உடையற்ற உடலாக கரை ஒதுங்குகிறாள். மீன்கள் அவளது உடலை கொத்தி இருப்பதை போகன் ஓரிரண்டு வரிகளில் சொல்லும்போது உடல் வனப்பு சட்டென அசூசை கொள்கிறது. அதற்கு காரணமானவனை கண்டுபிடிக்கையில் - எங்கு தேடியும் முடியாமல் ஒரு வீட்டில் கிருஷ்ணன் ஓவியமாக வரையப்பட்டுள்ளதை வைத்து - அவன் கருப்பாக சொட்டையானவனாக இருக்கிறான். அவனை அவள் தேர்ந்து கொல்வதற்கு எந்த காரணமும் இருக்கவில்லை. அவன் பெயர் கிருஷ்ணன்.

ஊரின் வளம் மிகுந்த அழகியாக இருந்தவளுக்கு மனத்தின் ஆசைகளே கோலங்களாக எழுகின்றன. அர்த்தமற்ற கணவனோடு உள்ள அவளுக்கு தனது மனதுக்கு உகந்த ரகசியமான ஒரு கற்பனை ஆண்மகன் ஒருவனை அவள் கிருஷ்ணனின் கோலங்களாக இடுகையில் - அந்த பெயருள்ள ஒருவன் நிஜமாக கிடைக்கும்போது அதுவே போதுமானதாக இருக்கிறது. உண்மையில் அவள் காமுற்று உடன்சென்றவள் அந்த கருப்பான சொட்டையாக உள்ளவன் அல்ல. அவன் அவள் வரைந்த கோலத்தின் நிழலையொத்த நிஜம். கிருஷ்ணனுக்கு ஆயிரம் நாமம் போல தினமொரு கிருஷ்ணன் கோலம். ஆனால் அவளது கிருஷ்ணன் ஒருவன்தான். தாம்பத்தியம் வறண்ட அவளது வாழ்வில் கிருஷ்ணன் என்ற பெயரே ஒரு குறும்பான இளைஞனாக எழுகிறது. அவள் கோலா கிருஷ்ணனின் ஒருவிதமான ஆண்டாள்தான். நியதிக்கு உட்பட்ட நமது சமூகத்தில் ஒரு சராசரியான பெண்ணின் அந்தரங்க ஆசைகள் எதுவும் அடையாளம் பெறுவதில்லை. கிணற்று நீர்போல சில பெண்களின் ஆசைகள் இருந்தாலும் ஆழ்துளைக் கிணற்று நீராகதான் பல பெண்களின் விழைவுகள் மெளனமாக தேங்கி கிடக்கின்றன. தாங்கள் வெளிப்படையாக ஒதுக்கப்படும்போது அவர்கள் உள்ளூர பிறரை ஒதுக்க துவங்குகிறார்கள். அவர்களது மனதிற்குள் புகைந்து எழும் தாப உருவம் பிடிபடாதது. அது பேருருக் கொள்ள ஆரம்பிக்கையில் அவர்களே புகையுருவமாகி மிதந்து பறக்கிறார்கள் எல்லைகளை அழித்துக்கொண்டே. இந்த கதைக்கு ராமரின் என்று பெயர் வைத்திருந்தால் கதையே பிடிபடாமல் போகும் என்பதில்தான் இந்த கதையின் உள்ளீடு இருப்பதாக சொல்வேன். இது ராமன் கிருஷ்ணன் என்ற ஒற்றைப்பரிமாண எதிர்நிலைப்பாடு அல்ல. குறுகிய பொருள் கொண்டது அல்ல.

ஒரு இடத்தில் 'கிருஷ்ணன் இந்திய பெண்களின் ஆழ்மன ஆசைகளின் மொத்த வடிவம்' என்கிறார் பணிக்கர். இந்துப் பெண்கள் என்று திருத்துகிறார் மத போதகர். பணிக்கர் இந்தியப்பெண்கள் என்று உறுமினார் என்று ஒரு வரி. இது முக்கியமான வரி என்றே சொல்வேன். இந்திய எனும் விரிந்த பண்பாட்டின் மதம் எனும் ரேகைகள் ஓடினாலும் அவை கையை தனி விரல்களாகி விரிப்பதில்லை. உள்மன நிராசையில் குமையும் எல்லா மதத்தின் பெண்களும் ஒரே விதமான இந்திய பெண்ணின் வெவ்வேறு பிம்பங்களாக இங்கே தெரிகின்றனர். ஒரு விதமாக பார்த்தால் பெண்ணின் உள்ளூறும் விழைவுகளை நெறிப்பதில் எல்லா மதங்களும் ஒன்றாக இருக்கும்போது, எல்லா பெண்களும் ஒன்று போலவே தெரிவது வியப்பொன்றுமில்லையே.

ஒரு முறை பணிக்கர் மருந்து சூரணம் கொடுக்க உம்மிணி வீட்டுக்கு சென்றிருந்தபோது நெய் எடுக்க சமையலறைக்கு போகும்போது நெய்யோடு சர்க்கரை சேர்த்து தின்று கொண்டிருந்தாள் என்கிறார். அவள் பூதகியா ? கோபிகையா ? என்கிறார் போதகர். அதற்க்கு பணிக்கர் 'இரண்டும்தான். இருவருக்கும்தான் கிருஷ்ணன் தேவைப்படுகிறான்" என்கிறார். ஆசைப்படுவதற்கு வித்யாசங்கள் எதற்கு என்பதை போகன் மிக இயல்பாக இங்கே சொல்லிவிடுகிறார்.

மேலும் கதை முடிவில் அவள் ஏன் இறந்தாள் என்ற கேள்வியே இங்கு மறந்து போய்விடுகிறது. ஏனென்றால் அவள் தனது கோலங்களின் மூலம் தனது கிருஷ்ணனை வரித்துக்கொண்டாள். அப்படியான பெயர் உள்ளவனையே அவனாக ஏற்று ஓடிப்போகிறாள். அதற்கு பிறகு அவள் வாழ்ந்த முறையோ மரணத்தின் காரணமோ சொல்லப்படுவதில்லை. ஏனென்றால் அவளுக்கு அது ஒரு பொருட்டே இல்லை.

No comments:

Post a Comment

இயற்பியலின் தாவோ - பிரிட்ஜாஃப் காப்ரா

இயற்பியலின் தாவோ பிரிஜாப் காப்ரா Fritjof Capra மொ பெ போன். சின்னத்தம்பி முருகேசன் சந்தியா பதிப்பகம் #இயற்பியலின்_தாவோ படிக்கத்  துவங்கி இர...