Monday 20 April 2020

மாயன் : ஹூலியோ கொர்த்தஸார் S வாசுதேவன் யாவரும் பதிப்பகம்.

மாயன் : ஹூலியோ கொர்த்தஸார்
S வாசுதேவன்  
யாவரும் பதிப்பகம். வேளச்சேரி. சென்னை
yaavarumarticles@gmail.com; 9042461472
 
ஆளுமை மிகு எழுத்தாளர்களை பற்றிய புத்தகங்கள் முக்கியமானவை. பெரும்பாலும் அவர்களது படைப்புகளை படித்தவர்கள் அதன் ஈர்ப்பில் எழுத்தாளர்களை பற்றி அறிந்து கொள்ள வாசிப்பதுவே அதிகமாக காணப்படும். தமிழில் சாகித்ய அகாதமி இப்படி எழுத்தாளர்கள் மற்றும் ஆளுமைகள் பற்றிய புத்தகங்களை தொடர்ந்து வெளியிட்டு வந்துள்ளன. ஆனால் இந்த 'மாயன்'
 புத்தகம் அளவுக்கு விரிவும் ஆழமும் கொண்ட ஒன்றை நான் இதுவரை வாசித்ததில்லை. வெறும் சுயசரிதை போன்ற விதந்தோதல்களை மட்டுமே கொண்டதாக இல்லாமல் விரிவாக செறிவோடு இருக்கிறது. மிகுந்த பிடிப்பும் தேடலும் ரசனையும் கவனிப்பும் இருந்தால் மட்டுமே இப்படி எழுத முடியும். வாசு அதை செய்திருக்கிறார்.

வாசுவின் போர்ஹேஸ் பற்றிய உரை (பிரம்மராஜன் கலந்துகொண்ட நிகழ்வு) ஒன்றை கண்டபிறகு அவரை கவனிக்க ஆரம்பித்தேன். மேலை இலக்கியங்களை படித்தவர்கள் அவற்றை தமிழில் பேச வேண்டியது முக்கியமான விஷயம். மேலை இலக்கியம்தான் உயர்ந்தது என்றும், அது நமக்கு ஒவ்வாத விஷயம் என்றும் தனித்தனியாக பிரிந்து கொடி பிடிப்பவர்களை பற்றி நமக்கு கவலை இல்லை. ஆனால் அவற்றை அறிமுகம் செய்ய - சரியாக அறிமுக செய்ய வேண்டியது முக்கியம்.

இலக்கியம் என்பது நாம் ஒத்துக்கொண்டாலும் ஒத்துக்கொள்ளாவிட்டாலும் எழுதப்பட்ட மண் மற்றும் சூழலின் தன்மையை பிரதிபலிப்பதாக அல்லது அது பற்றி பேசுவதாக மட்டுமே அமையும் தன்மை உடையது. அப்படி இல்லாதவை கால ஓட்டத்தில் வெளிறிச் சருகாகும். மேலை இலக்கியங்கள் நமது இந்திய சூழலுக்குள் இயங்க வேண்டிய அவசியம் இல்லை. அவை அவற்றின் சூழலில் எப்படி இயங்கின என்பதை நாம் படித்து உணரவேண்டியது ஒரு இலக்கிய வாசகனுக்கு முக்கியம். ஏனென்றால் நதியைப்போல இலக்கியம் வளர்ந்து ஓடிப் பெருகுவது. வெறும் கோடை மழை அல்ல.

எனது சிற்றறிவுக்கு எட்டிய வரையில் உலகப்போர் என்பது இந்திய இலக்கிய வெளியில் பெரிதான தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கவில்லை. தவிர போர் என்பதே கூட தென்னகத்தில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தி இருக்கவில்லை. போர்க்காலங்களில் சங்கு ஊதும்போது விளக்குகள் இரவில் இணைக்கப்படும், ரேஷன்களில் சிக்கல் இருக்கும் போன்ற லௌகீக பார்வைகள் தவிர பெரிதான வேறொரு தாக்கம் இங்கு இல்லை. இன்றைக்கும் அண்டை நாட்டு ஊடுருவல் எனும் அச்சம் நிகழும்போது - குஜராத், ராஜஸ்தான், காஷ்மீர், அருணாச்சல பிரதேசம், கொல்கத்தா போன்ற நகரங்களில் இருக்கும் சிறு பதட்டத்தை கூட நாம் இது வரை உணர்ந்ததில்லை. ஆகவே தென்னகம், குறிப்பாக தமிழகம் பெருமளவில் எல்லாவற்றையும் வேடிக்கை பார்த்து 'கருத்து சொல்லி' போவதே வழக்கமாக கொண்டுவிட்டது.

தேசபக்தி என்பது விடுதலைக்கான அடிப்படை உணர்ச்சிப் பொறியாக இருந்தது. அடக்குமுறைகளின் வெப்பத்தை உணர்ந்தவர்களுக்கு அதன் அத்தியாவசியம் புரிந்திருந்தது. இது இந்திய இலக்கிய வெளியில் பிரச்சாரமாக அல்லது சற்று ஓங்கிய குரலுடன் வெளிப்பட்டது. அல்லது அது பற்றி பெரிதும் பேசாமலே இருந்தது. இந்திய சுதந்திரத்தின் இன்றியாமையை மையப்படுத்தி ஆரம்பிக்கப்பட்ட மணிக்கொடி, கூட முற்றிலும் வேறு ஒரு பரப்பை அடைந்தது.

எப்போது வேண்டுமானாலும் குண்டு விழுந்து உயிர் போகும் என்ற நிலையில் பெற்றோர்களை இழந்த நிலையிலும் ஒவ்வொரு நாளையும் ஒரு உயிர்வாழும் வாய்ப்பாக கடத்திய சிறுமி ஆனி பிராங்க் டைரிக்குறிப்பை போல ஒரு எளிய படைப்பு தமிழில் இருக்கிறதா என்று தெரியவில்லை.

சி சு செல்லப்பாவின் சுதந்திர தாகம் நாவல் மட்டுமே விரிவாக பேசி இருக்கிறது. தவிர குஷ்வந்த் சிங் போன்றவர்கள் பிரிவினை காலம் பற்றி எழுதி இருந்தனர். மேலும் சிலரது படைப்புகள் இருக்கலாம். அசோகமித்திரனின் பதினெட்டாவது அட்சக்கோடு கூட பிரிவினை காலத்தின் பின்னணியில் உள்ளோட்டமாக பேசும் நாவல்தான்.

அரசியல் சமூக நிலவரத்தை பற்றி குரலுயர்த்தி ஆவேசமாக எழுதப்படும் படைப்புகளுக்கு நமக்கு பஞ்சமில்லை. ஆனால் அவை இலக்கிய வடிவம் / அம்சம் பெறுவது முக்கியமானது. சமூக வலிகள் - அது அரசியற் பட்டதாக இருந்தாலும் - பொதுமனத்தில் ஒரு கிள்ளலை, கேள்வியை உருவாக்கவேண்டும். அது குண்டு போடுவதைப்போன்ற ஆவேசத்தில் இல்லாமல், ஒரு பொறியில் தம் எண்ணத்தை எரித்துக்கொண்டு எழும் ஆகுதி போல இருக்கவேண்டும். மண்டோவின் கதைகள் போன்றவை இப்படியான இடத்தில் இருப்பதாக எண்ணுகிறேன்.

பெல்ஜியத்தில் பிறந்து பிரான்சில் அதிகமும் வாழ்ந்த ஸ்பானிஷ் எழுத்தாளர் ஹூலியோ கொர்த்தஸார் பற்றி மூன்று பகுதிகளாக பிரித்து விரிவாக கச்சிதமாக எழுதப்பட்டிருக்கும் படைப்பு இது. மூன்றாம் பாகத்தில் மிகச்சில 'கூறியது கூறல்கள்' இருந்தாலும், அது தடையாக இல்லை.

நாம் அர்ஜென்டினா என்று சொல்லும் இலத்தீன் அமெரிக்க நாடு ஸ்பானியத்தில் அர்ஹென்தினா என்றே உச்சரிக்கப்படுகிறது. இந்த புத்தகம் முழுதும் வாசு அர்ஹென்தினா என்றே எழுதுகிறார். மூலத்தின் விழுமியத்தை அவர் பெற்றுக்கொண்டு சிலாகிப்பதை, அவருடைய ஈடுபாட்டை அறிய, இந்த ஒன்றே போதும்.

பெல்ஜியத்தில் பிறந்து குழந்தை பருவத்திலேயே சுவிட்சர்லாந்து சென்று பிறகு அர்ஹென்தினா வந்து பிறகு இறக்கும் வரை பாரீஸ். கொர்த்தஸார் இறந்தபின் ஊடகத்தை வெளியான இரங்கல் செய்தியில்தான் இந்த புத்தகம் தொடங்குகிறது.

கொர்த்தஸாரின் மூன்று அம்சங்களை தோராயமாக நாம் அடையாளம் கண்டு கொள்ளலாம். இதுவரை பழகிய பாதையில் உருளாமல் தனித்துவமான கதை மொழியை உருவாக்கியது - சரியாலிச தன்மை கொண்ட மாயத்தன்மை கொண்ட பாணியில் தனது கதை அம்சங்களை உண்டாக்கியது - அரசியல் பார்வையோடு படைப்புகளை பிற்காலத்தில் உருவாக்கியது. மார்க்கவெஸ், போர்ஹே போன்றவர்களின் பாணி நம் நினைவுக்கு வரக்கூடும்.

உலகப்போர் மற்றும் அதற்கு பிந்தைய காலனிய ஆட்சி மற்றும் அடக்கு முறைகளில் சிக்கி தத்தளித்த நாடுகளில் இருந்து எழுதப்பட்ட படைப்புகள் இவருடையவை. ஆனாலும் போர்ஹேஸ் போன்றவர்கள் அரசியலை தொடாமல் எழுதி இருக்கிறார்கள். இந்தியாவில் நிலவியது போலவே அங்கேயும் கலை கலைக்காக மட்டுமே, கலை மக்களுக்காக மட்டுமே என்ற வேற்றுப் பார்வைகள் நிலவின. தனது சிறுகதையை முதலில் வெளியிட்ட போர்ஹே வை அரசியல் பேசாத படைப்புகளை எழுதுவதால் முற்றிலும் எதிர் நிலையில் இருந்து செயலாற்றி விமர்சித்திருக்கிறார் கொர்த்தஸார்.

இலக்கியத்தில் அரசியல் என்பது ஒரு இசை நிகழ்ச்சியில் கைத்துப்பாக்கியின் தோட்டா வெடிப்பின் ஒலி போல் ஆபாசமானது, தேவையற்றது என ஸ்டெந்தால் குறிப்பிட்டதை சொல்லி எழுபதுகளில் இந்த தோட்டா ஒலியின் அவசியத்தை தேவையை கொர்த்தஸார் வாசகர்கள் உணர்ந்தனர் என்கிறார் வாசு.

கோர்த்தஸாரின் எழுத்து வளர்ச்சியை மூன்று பாகங்களாக சொல்கிறார் வாசு. பேண்டஸி அழகியல் முறை கொண்டது (1950 ) - பிறகு மெட்டாபிஸிக்கல் முறை இணைந்த பேண்டஸி (1960 ) - பிறகு எழுபதுகளில் அரசியல் வரலாற்றை எதிர் எதார்த்த பாணியில் எழுதியது.

ஆச்சரியம் என்னவென்றால், தனிமையை விரும்பி தன்னைஒதுக்கிக்கொண்டு வாழ்ந்து, எழுதி எழுதி சீர்படுத்திக்கொண்டு அரசியல் பற்றிய எந்த பார்வையும் இல்லாமல் ஆரம்பத்தில் எழுதிய கொர்த்தஸார் - அரசியல் அடக்குமுறை காரணத்தால் அவஸ்தைப்பட்டு பணியை ராஜினாமா செய்துவிட்டு போனாலும் அரசியல் பற்றி எதுவும் எழுதாதவர் - பிற்காலத்தில் அரசியல் கலந்து தீவிர படைப்புகளை எழுதினார்.

கொர்த்தஸார் பெல்ஜியத்தில் பிறந்தார். ஆனால் வாழ்க்கை முழுதும் ஐரோப்பிய நிலங்களில்தான். ஆனால் தாய் மண்ணை எப்போதும் நேசித்தபடியே இருந்தார். அவர் அர்ஹென்தினா பற்றி வெளியில் இருந்துகொண்டுதான் எழுத முடிந்தது. பிரான்ஸ் நாட்டின் குடியுரிமை தரப்பட்டபோதும் தாய் நாட்டின் குடியுரிமையை அவர் விட்டுவிடவில்லை. பிற்காலத்தில் 'உன்னை எப்போதும் நினைக்கிறேன். எப்போதும் பார்த்துக்கொண்டே இருக்கிறேன்' என்று அர்ஹென்தினாவை பற்றி ஏக்கமுடன் எழுதுகிறார். வெளிநாட்டில் சொகுசாக இருந்து கொண்டு பாதிக்கப்பட்ட பிற நாட்டைப் பற்றி எழுதும் அவரது எழுத்து பாசாங்கு கொண்டது என்று அவரது தாயகத்து அர்ஹென்தினா மக்களே அவரை கடுமையாக விமர்சித்தனர்.

லத்தீன் அமெரிக்க மும்மூர்த்திகள் என்று கொர்த்தஸார், போர்ஹேஸ், யுவான் ரூல்போ மூவரையும் சொல்கிறார் வாசு. உளவியல், ஓவியம், சிற்பம், கீழைத்தேய மரபு, உபநிஷத்துக்கள், புகைப்படம், குத்துச்சண்டை, நடனம், ஜாஸ் என சகட்டுமேனிக்கு ஈடுபாடு கொண்டு வாசித்திருக்கிறார். பியானோ கற்றுக்கொள்ள ஆரம்பித்து நிறுத்தி விட்டிருக்கிறார்.

சிறு வயதிலேயே தந்தையால் கைவிடப்பட்டவர். பெண்களால் வளர்க்கப்பட்டவர். அவரது கதையுலகில் பெண்கள் முக்கியம் பெறுகிறார்கள். விவாக ரத்து ஆனாலும் முதல் மனைவிக்கு முதல் திருமணம் மூலம் பிறந்த குழந்தையை இறுதிவரை நேசித்தார். தனக்கு கிடைக்காத அன்பை பாரபட்சம் இல்லாமல் அந்த மகனுக்கு தருகிறார் என்று நினைக்க இடமுண்டு என்கிறார் வாசு. மிகச் சரி. (இப்படியான இடங்களை வைத்து, நமது நாட்டின் இலக்கிய சமூக படைப்புகளோடு ஒப்பிட்டு நாம் பேசிக்கொள்ள வேண்டும் என்று ஒரு ஆசை எனக்கு உண்டு)

இந்த புத்தகத்தில் நான் கண்டுகொண்டது - ஒரு பக்கம் போர்ஹேஸ் அரசியலை தவிர்த்துவிட்டு படைப்புகளை தருகிறார். மறுபக்கம் மரியா லோசா தெளிவாக அரசியல் நிலைப்பாட்டை சொல்லி படைப்புகளை உருவாக்குகிறார். இதில் கொர்த்தஸார் அரசியல் இல்லாத தளத்தில் இருந்து அரசியல் தளத்துக்கு நகர்ந்து வந்து, அரசியல் பார்வையுடைய ஆனால் வெளிப்படையாக பேசாத படைப்புகளை தந்தார். அவருடைய 'இந்த இடமே' அவரை நேர்மறை மற்றும் எதிர்மறை விமரிசனத்துக்கு உள்ளாக்கியது.

கொர்த்தஸார் கியூபாவின் பிடல் காஸ்ட்ரோவின் முழு ஆதரவாளர். மரியா வேர்க்ஸ் லோசா வலது சாரி அரசியலோடு இணைந்தவர். ஆனால் ஒருவர் மேல் ஒருவர் மரியாதை கொண்டு இருந்தார்கள். பிடல் காஸ்ட்ரோ சே குவாரா இருவரும் கோர்த்தஸாரின் ஆதர்ச ஆளுமைகளாக இருந்தார்கள். நிக்கராகுவாவின் ஒர்டேகா கியூபாவில் ஆயுத பயிற்சி பெற உதவும் அளவுக்கு பிடலுக்கு நெருக்கமான வராக இருந்தார் கொர்த்தஸார்.

அமெரிக்க அரசு கார்பரேட்டுகளுக்கு ஆதரவாக செயல்பட்டு எளிய மக்களை இம்சிக்கும் அரசை எதிர்த்து குரல் எழுப்பும் எழுத்தாளர்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்தவர்களின் கொர்த்தஸார் ஒருவர். கலைஞர்களை ஒடுக்கும் அதிகாரத்துக்கு எதிராக செயல்பட்டு அதனால் கியூபாவின் பிடல் காஸ்ட்ரோவிடம் நெருக்கமாகி காசா என்ற அமைப்பின் மூலமும் செயல்பட்டவர்.

ஆனால் நகை முரணாக, பிடலின் க்யூபா அரசு ஹெபர்ட்டோ படியா வை கைது செய்கிறது. க்யூபா எழுத்தாளர் இன்பாந்தே கடுமையாக பிடல் காஸ்ட்ரோவை விமர்சிக்கிறார். க்யூபா அரசை எதிர்த்து அறிக்கை வெளியிட்டு அதில் கொர்த்தஸாரை கையெழுத்திட சொல்லும்போது அவர் தர்ம சங்கடத்தில் ஆகிறார். அறிக்கையின் சில பகுதிகளை திரு த்திவிட்டு கையெழுத்து போடுகிறார். மற்றொரு அறிக்கை கொடுங்கோலனாக பிடல் இருக்கிறார் என்று அறிக்கை வரும்போது அதில் கொர்த்தஸார் கையெழுத்து போடவில்லை. எழுத்தாளர்களையும் கியூபாவின் பிடல் அரசையும் சமரப்படுத்த முயல்கிறார். இங்கே கொர்த்தஸாரின் அறவுணர்வு கேள்விக்கு உட்படுத்தப்படுகிறது.

ஆனாலும் மிக நெருங்கிய பெடல் காஸ்ட்ரோ வே இவர் மீது கோபம் கொண்டு ஏழு ஆண்டுகளுக்கு க்யூபாவுக்குள் நுழைய இவருக்கு தடை விதிக்கிறார்.

நாவல்கள் எழுதி இருந்தாலும் சிறுகதை வடிவமே இவருக்கு பெயரை தந்தது. மாயத்தன்மை கொண்ட மொழி சுழற்சியில் கனவும் நனவும் பிணையும் தன்மைகொண்ட எழுத்தை உருவாக்கினார். இதற்கு அவருடைய ஸ்பானிய மொழியும் ஆங்கிலம் மற்றும் பிரெஞ்சு அறிவும் உதவியாக இருந்திருக்கின்றன. சில கதைகள் குறியீட்டு தன்மை கொண்டவையாக இருக்கின்றன.

முக்கியமான கதைகளை பற்றி சொல்லி, இரண்டாம் பாகத்தை விரிவாக கொர்த்தஸாரின் படைப்பு பற்றிய பகுதியாக வாசு தந்திருக்கிறார்.

பதிவின் நீளம் கருதி ஒரே ஒரு கதை பற்றி மட்டும் இங்கே. ஒரு முதியவள் மரணப்படுக்கையில் இருக்கிறாள். அப்போது அவளது மகன் விபத்தில் சிக்கி இறக்கிறான். அதை முதியவளுக்கு சொல்லி அதிர்ச்சி தராமல் இருக்கும் பொருட்டு உடனிருப்பவர்கள், அவன் வேலையின் பொருட்டு பிரேசிலுக்கு சென்றிருப்பதாக சொல்கிறார்கள். வேறு ஒருவரை வைத்து அவன் கடிதம் எழுதி இருப்பதாக சொல்லி நம்ப வைக்கிறார்கள். போகப்போக அவர்களே அந்த பொய்யாய் நம்பும்படி நடந்துகொள்ள வேண்டி இருக்கிறது. இந்த பொய் விளையாட்டு ஒரு சமயத்தை அந்த முதியவளுக்கே தெரியும் என்பதை ஒரு இடத்தில் குறிப்பாக சொல்கிறார். ஒரு விதத்தை முதியவளும் இந்த விளையாட்டில் சேர்ந்து கொண்டு விடுகிறாள். ஒரு பொய்யை ஒருவரிடம் உண்மை என்று அறிமுகம் செய்யும்போது, அவரும் அது பொய் என்று தெரிந்தும் உண்மை போல பாசாங்கு செய்யும்போது, பொய் உண்மை என்பனவற்றின் இடமாற்றம் நடக்கிறது. இப்படி மரணம் வாழ்க்கை உண்மை பொய் என்ற சுழற்சியில் இந்த கதை செல்கிறது.

பாண்டிவிளையாட்டு என்ற நாவல் அத்தியாயங்களை இடையே தொடர்புகளை கலைத்துப்போட்டு எழுதப்பட்ட நாவல். மூன்று விதமாக அதில் நுழைந்து படிக்கலாம். இந்த நாவல் எப்படி அத்தியாயங்கள் வழியாக நுழைந்து வாசிக்கப்படலாம் என்பதை குறிப்பாக தந்திருக்கிறார். (படம் காண்க ).

மற்றொரு படைப்பில் ஒற்றைப்படை வரிகளை மட்டும் படித்தல் ஒரு கதையும் இரட்டைப்படை வரிகளை படித்தால் ஒரு கதையாக அமையும்படி எழுதி இருக்கிறார். இடப்பக்கம் வலப்பக்கம் என்று பிரித்து எழுதி இருக்கிறார். கதையில் புகைப்படத்தின் மூலம் மற்றொரு கதையை விரிக்கும் பாணியில் எழுதி இருக்கிறார். இவற்றை எல்லாம் அக்கதைகளை படித்து மட்டுமே நம்மால் உணர முடியும். படிக்க ஆரம்பித்திருக்கிறேன்.

இறுதியாக இந்த புத்தகத்தில் எனக்கு பிடித்த ஒரு அம்சம் பற்றி மட்டும் சொல்ல விழைகிறேன்.

கொர்த்தசாருக்கு மூன்று மனைவிகள். அதில் அவுரோரா என்பவர்தான் கொர்த்தசாருக்கு ஆன்ம நெருக்கம் கொண்டவராக இருந்திருக்கிறார். லிதுவேனிய பெண் கார்வாலிஸ் இன்னொருவர். டன்லப் மற்றொருவர். ஆனால் அவுரோரா அவருக்கு எப்போதும் நெருக்கமானவராகவே இருக்கிறார். இவர் அளவுக்கு இலக்கியமும் அரசியலும் ஆழமாக அறிந்தவர். இணைந்து பயணம், படைப்பு என்று நீண்ட வாழ்க்கை அவர்களுடையது. பின்னாளில் அரசியல் காரணமாக பிரிகிறார்கள். ஆனால் மூன்றாவது மனைவி இறந்தபின் ஒடுங்கி விரக்தியில் இருந்த கொர்த்தஸாரை உடனிருந்து கவனித்து தெம்பூட்டியவர் அவுரோராதான். கொர்த்தஸார் இறந்தபின் அஞ்சலி கட்டுரை எழுதிய லோசா, இதை எழுதுவது அவுரோரா எனும் பெண்ணுக்காகத்தான் என்று குறிப்பிடுவது முற்றிலும் பொருத்தம்.

இந்தியாவிற்கு வந்திருந்தபோது காசியில் பிணங்கள் எரிக்கப்படுவதை பார்த்த கொர்த்தஸார் அவுரோரா தம்பதி பயந்து போய தாம் இறந்தால் ஒருபோதும் எரிக்கப்படக்கூடாது என்று உரையாடலை பதிவு செய்கிறார்கள். பின்னாளில் கொர்த்தஸார் இறந்து போகிறார். ஆனால் தனது உடல் மூன்றாவது மனைவியின் உடல் அருகில் அடக்கம் செய்யவேண்டும் என்று உயில் எழுதி வைக்கிறார். இத்தனைக்கும் கொர்த்தசாருக்கு பலவிதத்தில் ஆதரவாகவும் அன்பாகவும் அறிவு பூர்வமாகவும் துணை நின்றவர் அவுரோராதான். ஆனால் முந்தைய மனைவியான அவுரோரா அவர் விருப்பப்படியே அப்படியே புதைக்கிறார். எவ்வளவு பெரிய மனம் வேண்டும் இதற்கெல்லாம் ! அதன் பிறகு அவருடைய எல்லா படைப்பையும் தொகுத்து வெளிக்கொண்டு வந்து கொர்த்தஸார் இன்று நாம் அறிவதற்கு பெரும் காரணமாக இருந்தவர் அவுரோராதான். அவர் இறந்த பிறகு கொர்த்தஸார் அருகில் புதைக்க இடம் இல்லை. ஆகவே கிறித்தவ மரபுக்கு மாறாக அவர் எரிக்கப்பட்டு அவருடைய அஸ்தி கொர்த்தஸார் அருகில் புதைக்கப்பட்டது !

காலம் எவ்வளவு விசித்திரமானது !

No comments:

Post a Comment

இயற்பியலின் தாவோ - பிரிட்ஜாஃப் காப்ரா

இயற்பியலின் தாவோ பிரிஜாப் காப்ரா Fritjof Capra மொ பெ போன். சின்னத்தம்பி முருகேசன் சந்தியா பதிப்பகம் #இயற்பியலின்_தாவோ படிக்கத்  துவங்கி இர...